சென்னை: நடிகர் அருண் விஜய் நடிப்பில் இயக்குநர் ஹரி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான யானை திரைப்படத்துக்கு எதிராக சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்த தமிழ்நாடு மீனவர் கூட்டமைப்பின் செயற்குழு உறுப்பினர் ஜோபாய் கோமஸ் என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், யானை திரைப்படத்தில் ராமநாதபுரம், தங்கச்சிமடம், பாம்பன் பகுதி மீனவ சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் சமூக விரோதிகளாக காட்டப்பட்டுள்ளனர். மீனவர்கள் கூலிப்படையினராகவும், குழந்தைகளை தவறாக பயன்படுத்துபவர்களாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளனர். சில காட்சிகள் மத உணர்வை புண்படுத்தும் வகையில் இருக்கின்றன.
கச்சத்தீவு பிரச்னையும் இந்த படத்தில் கையாளப்பட்டுள்ளது. இந்த விதம் மீனவர்களது உணர்வுகளை புண்படுத்தும் வகையில் இருக்கிறது. ஆகவே, உயிரை பணயம் வைத்து நடுக்கடலில் மீன் பிடித்து, ஆண்டுக்கு 10 ஆயிரம் கோடி ரூபாய் அன்னிய செலாவணி ஈட்டித்தரும் விளிம்புநிலை மக்களான மீனவர்களை அவமதிக்கும் வகையில் உள்ள காட்சிகளுடன் படத்தை தொடர்ந்து திரையிட தடை விதிக்க வேண்டும்.
படத்துக்கு வழங்கப்பட்ட தணிக்கை சான்றிதழை ரத்து செய்ய வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த மனு தலைமை நீதிபதி முனீஸ்வரர் நாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் காணொலி காட்சி மூலம் ஆஜராவதில் இடையூறு ஏற்பட்டதால், வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 1ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க: ‘சிறுமிகள் பாலியல் வன்கொடுமை புகார்களில் உடனடி வழக்குப்பதிவு செய்ய வேண்டும்’ - உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்