தமிழ்நாட்டில் கட்டாய ஹெல்மெட் சட்டத்தை அமல்படுத்தக் கோரி கே.கே.ராஜேந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், மாவட்ட வாரியாக பதிவான விபத்து விபரம் குறித்தும், ஹெல்மெட் அணியாததால் பதியப்பட்ட வழக்குகள் குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு நேற்று நீதிபதிகள் சத்திய நாராயணன், சேஷசாயி அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, சட்டம் ஒழுங்கு பிரிவின் உதவி ஐ.ஜி சாம்சன் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், தமிழ்நாடு முழுவதும் கடந்தாண்டு 2018 ஆகஸ்ட் வரை ஹெல்மெட் அணியாத காரணத்திற்காக 22.65 லட்சம் பேர் மீது வழக்கு பதியப்பட்ட நிலையில், இந்தாண்டு ஆகஸ்ட் நிலவரப்படி 43.31 லட்சம் பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளதாகவும், கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் இந்தாண்டு ஹெல்மெட் அணியாதவர்கள் மீது பதியப்பட்ட வழக்கு எண்ணிக்கை 20 லட்சம் அதிகரித்துள்ளதாகவும், இது கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் 91 விழுக்காடு அதிகம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதே போல் கடந்தாண்டு 2018 ஆகஸ்ட் வரை, ஹெல்மெட் அணிந்தும் விபத்தில் சிக்கி பலியானவர்கள் எண்ணிக்கை 222 ஆகவும், ஹெல்மெட் அணியாமல் உயிரிழந்ததவர்கள் எண்ணிக்கை 4337 ஆகவும் இருந்த நிலையில், 2019 ஆகஸ்ட்டை பொறுத்த வரை ஹெல்மெட் அணிந்து உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 289 ஆகவும், ஹெல்மெட் அணியாமல் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 3376 ஆக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே போல, இருசக்கர வாகன விபத்துகளால் ஏற்பட்ட இறப்புகளின் எண்ணிக்கை கடந்தாண்டு ஆகஸ்ட வரை 4457 ஆக இருந்த நிலையில், இந்தாண்டு ஆகஸ்ட் வரை 3677 ஆக குறைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மோட்டார் வாகன விதிகளை கண்டிப்புடன் அமல்படுத்தும் வகையில் தமிழ்நாடு காவல்துறையில் 8477 காலி பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் அறிவிப்பனை வெளியிடப்பட்டு கடந்த ஆகஸ்ட் 25 ஆம் தேதி எழுத்து தேர்வுகள் முடிந்துள்ளதாகவும், அனைத்து நடைமுறையும் முடிந்த பின்னர் இவ்வாண்டே 969 உதவி ஆய்வாளர் பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனையடுத்து , வட சென்னையில் ஜிஏ சாலை, பிராட்வே, பேசின் பிரிட்ஜ் சாலை போன்ற இடங்களில் ஹெல்மெட் சோதனை முறையாக நடைபெறுகிறதா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
அதேபோல, ஹெல்மெட் வழக்கு குறித்து சமூக வலைதளங்களில் பேசுபவர்கள், ஹெல்மெட் அணியாமல் உயிரிழந்தவர்களின் குடும்பத்தை பார்த்துக் கொள்வார்களா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். தமிழ்நாடு அரசின் அறிக்கையை தொடர்ந்து, வழக்கு விசாரணையை நவம்பர் 11ஆம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதிகள், ஹெல்மெட் சோதனையை தொடர்ந்து நடத்த அறிவுறுத்தியுள்ளனர்.
'ஹெல்மெட் அணியாமல் மதுபோதையில் வந்தவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்': நீதிமன்றம் அதிரடி!