அண்ணா பல்கலைக்கழகத்தில், எம்.டெக். பயோடெக்னாலஜி, எம்.டெக். கம்ப்யூட்டேஷனல் டெக்னாலஜி ஆகிய இரண்டு பட்ட மேற்படிப்புகளுக்கும் இந்த ஆண்டு மாணவர்கள் சேர்க்கை இல்லை என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டது. இதனை எதிர்த்து இந்த படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு எழுதி, விண்ணப்பித்திருந்த மாணவிகள் சித்ரா, குழலி உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இந்த வழக்குகள் நீதிபதி புகழேந்தி முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. விசாரணையில், மாணவர்களின் நலன் சம்பந்தப்பட்ட இந்த விவகாரத்தில் எவ்வாறு தீர்வு காணப் போகிறீர்கள்? இந்த படிப்பை பல்கலைக்கழகம் தொடர்ந்து நடத்த என்ன செய்வது? என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து, இந்த ஆண்டு மாநில அரசின் இட ஒதுக்கீட்டு முறையை பின்பற்றி மாணவர் சேர்க்கை நடத்தவும், அடுத்தாண்டு முதல் மத்திய அரசு இட ஒதுக்கீடு முறையை பின்பற்றலாம் என்றும் யோசனை தெரிவித்த நீதிபதி, 45 மாணவர்களை சேர்ப்பதால் எந்த சிக்கல் ஏற்படாது என்றும் கூறினார்.
இந்த வழக்கு எம்.டெக் படிப்பில் இருந்து இட ஒதுக்கீடு பிரச்னைக்கு திசை மாறி செல்வதாகவும், உச்சநீதிமன்ற தீர்ப்பு வரும் வரை 69 விழுக்காடு இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படாதா? எனவும் கேள்வி எழுப்பினார்.
இந்தாண்டு எம்.டெக் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை அண்ணா பல்கலைகழகமே நடத்தும் நிலையில், இதில் மத்திய அரசின் இட ஒதுக்கீடு பின்பற்றப்பட்டால் அது பல்கலைகழகத்தை இக்கட்டான சூழ்நிலைக்கு கொண்டு செல்லும் என்றும் தெரிவித்த நீதிபதி, தொடர்ந்து இந்த விவகாரத்தில் தீர்வு காணவும் எம்.டெக் படிப்புகளில் மாணவர் சேர்க்கையை தொடங்குவது குறித்து பிப்ரவரி 18ஆம் தேதி அனைத்து தரப்பினரும் விளக்கமளிக்கவும் உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: 49.9 விழுக்காடு இடஒதுக்கீட்டை பின்பற்றும்படி மறைமுகமாக நிர்பந்திக்கிறதா மத்திய அரசு? நீதிபதிகள் கேள்வி