சென்னை: மத்திய அரசின் முத்ரா கடன் உதவி திட்டத்தால் தமிழ்நாட்டில் 1.50 கோடி பேர் கடன் பெற்று தொழில் நிறுவனங்களை தொடங்கியுள்ளனர் என்றும், முத்ரா கடன் திட்டத்தால் தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளதாகவும் ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.
"வடகிழக்கு மாநிலங்களை வளம் மற்றும் வளர்ச்சியை நோக்கிய பாதையில் அழைத்து செல்வது" எனும் தலைப்பில் சென்னை ஐஐடியில் கருத்தரங்கு இன்று நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார். அப்போது சென்னை ஐஐடியில் பயிலும் வடகிழக்கு மாநில மாணவ, மாணவிகள் தங்கள் பாரம்பரியப்படி உடை அணிந்து மேடை முன் சென்று ஆளுநருக்கு வணக்கம் தெரிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவி பேசியதாவது:
இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளில் சாலை மேம்பாடு அதிகளவில் செய்யப்பட்டுள்ளதால், வடக்கிழக்கு மாநிலங்களில் உள்ளவர்களும் சென்னை போன்ற பகுதிகளுக்கு வர முடிகிறது. விமான நிலையங்களின் எண்ணிக்கையும் உயர்த்தப்பட்டுள்ளது.
ஆளுநர் ரவியை சந்தித்த சென்னை ஐஐடி-யில் பயிலும் வடகிழக்கு மாநில மாணவர்கள் (ETV Bharat Tamilnadu) 2013 வரை, அப்போதைய சூழ்நிலையால், வடகிழக்கு மாநிலங்களில் ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட 1000 பேர் வன்முறையில் இறந்தனர். முதலீட்டாளர்கள் அங்கிருந்து வெளியேறத் தொடங்கினர். வடகிழக்கு மாநிலங்கள் ஆபத்தானவை என்ற ஒரு கதை கட்டமைக்கப்பட்டது.2014 ல் பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு, நீங்களோ நாங்களே வேறானவர்கள் இல்லை என்று வட கிழக்கு மாநிலத்தவர்களிடம் கூறினார். இன்று பிரிவினைவாதம் பற்றி எந்த விவாதமும் அங்கு இல்லை. இங்குள்ள மாணவர்களாகிய நீங்கள் படித்து முடித்தவுடன் வடகிழக்கு மாநிலங்களுச் செல்ல வேண்டும் . தமிழ்நாட்டில், 1 கோடியே ஐம்பது லட்சத்திற்கும் அதிகமானோர் முத்ரா திட்டத்தில் கடன் பெற்றுள்ளனர். அவர்களில் கிட்டத்தட்ட பாதி பேர் பெண்கள், முத்ரா நிதியுதவின் மூலம் அவர்கள் செய்யும் அற்புதங்களை நான் கண்டிருக்கிறேன். அவர்கள் கண்ணியத்துடன் வாழ்கின்றனர். முத்ரா கடன் திட்டத்தால், தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளது. உங்கள் கல்விக்குப் பிறகு நீங்கள் அங்கு சென்று, ஒரு தொழில்முனைவோராக மாற வேண்டும் என எனது இளம் நண்பர்களை (மாணவர்களை) கேட்டுக்கொள்கிறேன். வடகிழக்கு பற்றிய பழைய கதைகளை ஒதுக்கித் தள்ளுங்கள், அது கட்டமைக்கப்பட்ட மேற்கத்திய கதை.
இவ்வாறு ஆளுநர் ஆர்.என்.ரவி பேசினார்.