சென்னை: அதிமுக பொதுக் குழு நாளன்று (ஜூலை 11) கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற கலவரம் தொடர்பான வழக்கில், எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் 14 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது கலவரத்தை தூண்டுதல், பயங்கர ஆயுதங்களுடன் கலவரத்தை ஏற்படுத்துதல், அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல், பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து அனைவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்கள் ஜாமீன் கோரி சென்னை எழும்பூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நீதிபதி கோதண்டராஜன் முன்பு இன்று (ஜூலை 19) விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரர்கள் தரப்பில், வாகனங்களுக்கு ஏற்பட்ட சேதமதிப்பின் ஒரு பகுதியை தாங்கள் தரத் தயாராக இருக்கிறோம். அதோடு நீதிமன்ற கட்டுப்பாடுகளை ஏற்கிறோம் என்று தெரிவிக்கபட்டது.
இதற்கு அரசு தரப்பில், ஜாமீன் வழங்கினால் மீண்டும் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும். ஆகவே வழங்கக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதி, மனுதாரர்கள் அனைவரும் 15 நாட்களுக்கு பொன்னேரி காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: எதிர்க்கட்சி துணைத் தலைவர் R.B.உதயகுமார்- இபிஎஸ் அறிவிப்பு