சென்னை: தமிழ்நாட்டில் தொற்று பாதிப்பு குறையக் குறைய படிப்படியாக அறிவிக்கப்பட்டு வருகிறது. இதுவரை ஐந்து கட்டங்களாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, இன்றைய தினம் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் உள்ளே பொதுப் போக்குவரத்து சேவை இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல சில மாவட்டங்களுக்கு இடையேயான பொதுப் போக்குவரத்துக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
உணவகங்களில் 50 விழுக்காடு இருக்கைகளில் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி வாடிக்கையாளர்கள் அமர்ந்து உண்ணலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதனால் அலுவலகம் செல்பவர்கள், வெளியூர்களில் தங்கி பணியாற்றுபவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கும் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.
பல நாள்களாக பார்சல் மட்டுமே வழங்க அனுமதிக்கப்பட்டதால், சில நேரங்களில் சாப்பிட இடம் இல்லாமல் சிரமப்பட்ட பணியாளர்களும் தொழிலாளர்களும் இந்த அறிவிப்பால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இருப்பினும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள முதல் நாளான இன்று பெரும்பாலான உணவகங்கள் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. அடுத்து வரும் நாள்களில் மக்கள் கூட்டம் அதிகரிக்கும் என எதிர்பார்ப்பதாக உணவக உரிமையாளர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.
ஒரு சில உணவகங்களில் மக்கள் அமர்ந்து சாப்பிடுவதற்கான சேவையை வழங்குவதற்கு போதிய பணியாளர்கள் இல்லை என உரிமையாளர்கள் கூறுகின்றனர். உணவகத் தொழிலாளர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் தாங்கள் தொடர்ந்து பார்சல் சேவை மட்டுமே வழங்குவதாகவும் கூறுகின்றனர்.
மேலும், தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும் முன்புபோல் அல்லாமல் மக்கள் பார்சல் வாங்கி சாப்பிடுவதையே விரும்புவதாகவும், இணையதளம் மூலமாக உணவுகளைப் பதிவு செய்வது அதிகரித்துள்ளது எனவும் உணவக உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.