சென்னை: தமிழ்நாட்டில் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மார்ச் 1ஆம் தேதிமுதல் கரோனா தடுப்பூசி போடுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை பொது சுகாதாரத் துறை இயக்குநரகம் வெளியிட்டுள்ளது.
அதில், “சுகாதாரத் துறைப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்களுக்கு கரோனா வைரஸ் (தீநுண்மி) தடுப்பூசி போட மத்திய சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தியது. அதனடிப்படையில் தமிழ்நாட்டில் ஜனவரி 16ஆம் தேதிமுதல் கரோனா தீநுண்மி தடுப்பூசி போடப்பட்டுவருகிறது.
சுகாதாரத் துறையில் பணியாற்றும் நான்கு லட்சத்து 57 ஆயிரத்து 614 பேர் பதிவுசெய்திருந்தனர். அவர்களில் பிப்ரவரி 26ஆம் தேதிவரை இரண்டு லட்சத்து 91 ஆயிரத்து 158 பேர் முதல் தவணையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டனர். இவர்களில் 55 ஆயிரத்து 877 நபர்கள் இரண்டாவது தவணை தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.
காவல் துறையில் ஒரு லட்சத்து 53 ஆயிரத்து 241 நபர்கள் பதிவுசெய்திருந்தனர். அவர்களில் 38 ஆயிரத்து 759 பேர் முதல் தவணை தடுப்பூசி போட்டுக் கொண்டனர். அதேபோல் முன்களப் பணியாளர்களாக இரண்டு லட்சத்து 20 ஆயிரத்து 991 பேர் பதிவுசெய்திருந்தனர். அவர்களில் முதல் தவணை தடுப்பூசி 59 ஆயிரத்து 448 பேர் போட்டுக் கொண்டுள்ளனர்.
மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தற்போது 60 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், 45 வயது முதல் 59 வயதிற்குள்பட்ட இணை நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மார்ச் 1ஆம் தேதிமுதல் தடுப்பூசி போட வேண்டும் என அறிவுரை வழங்கியுள்ளது.
மேலும் பிரதமரின் காப்பீட்டுத் திட்டம், முதலமைச்சரின் காப்பீட்டுத் திட்டம் ஆகியவற்றிற்கு அனுமதி பெற்றுள்ள தனியார், அரசு மருத்துவமனைகளில் கரோனா தடுப்பூசி போடப்படும். தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி போடுவதற்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.
தனியார் மருத்துவமனைக்குக் கட்டணம்
அரசு மருத்துவமனைகளில் கரோனா தீநுண்மி தடுப்பூசி இலவசமாகப் போடப்படும். தனியார் மருத்துவமனையில் கரோனா தீநுண்மி தடுப்பூசி போடுவதற்குக் கட்டணம் வசூல்செய்யப்படும். அதற்குரிய கட்டண விவரம் விரைவில் வெளியிடப்படும்.
தடுப்பூசி போடவருபவரின் விவரங்களை இணையதளத்தில் பதிவுசெய்ய வேண்டும். கோவின் இணையதளத்தில் பதிவுசெய்தவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி போட அனுமதி வழங்கப்படும்” என்பன உள்ளிட்ட வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.