சென்னை: மேற்கு மாம்பலம் பகுதியை சேர்ந்தவரான கிருஷ்ண பிரசாத் என்பவர் கோவிந்தன் சாலையில் அமைந்துள்ள கோயில் ஒன்றுக்கு நிர்வாகியாக இருந்து வருகிறார். இன்று கிருஷ்ணபிரசாத் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மோசடி புகார் ஒன்றை அளித்தார்.
பின்னர் மோசடி புகார் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த கிருஷ்ணாபிரசாத்தின் வழக்கறிஞர் முத்துகுமார், கடந்த 2019ஆம் ஆண்டு முதல் கிருஷ்ணபிரசாத் நிர்வகித்து வரும் கோயிலுக்கு நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனின் மகள் மதுவந்தி வருவதாகவும், அப்போது கிருஷ்ணபிரசாத்திடம், தான் p.s.b.b பள்ளியை நிர்வகித்து வருவதாகவும், பள்ளியில் சேர்க்க விரும்புவோர் தலா 3 லட்சம் கொடுத்தால் சீட்டு வாங்கி தருவதாக மதுவந்தி தெரிவித்தார். இதையடுத்து கடந்த 2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் கோயிலுக்கு வரக்கூடிய 8 நபர்கள் பள்ளி சீட்டு கேட்டு கிருஷ்ணபிரசாத்திடம் கொடுத்த 19 லட்சத்தை மதுவந்தியிடம் அவரது இல்லத்தில் வைத்து கொடுத்துள்ளார்.
நீண்ட மாதங்களாக பள்ளியில் சீட்டு கிடைக்காததால் சந்தேகமடைந்த பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்த போது, இதற்கு பயந்த மதுவந்தி 13 லட்சம் ரூபாயை பெற்றோர்களிடம் கொடுத்ததாக தெரிவித்துள்ளார்.
மீதமுள்ள 6 லட்சம் ரூபாயை மதுவந்தி தராததால் பாதிக்கப்பட்ட பெற்றோர்கள் கிருஷ்ணபிரசாத்திடம் பணத்தை கேட்டு தொந்தரவு கொடுத்ததால், பணம் குறித்து மதுவந்தியிடம் கேட்டப்போது கடந்த மார்ச் 18ஆம் தேதி தி.நகர் பூங்காவிற்கு வரவழைத்து கிருஷ்ணபிரசாத்தை மதுவந்தி அடியாட்களை வைத்து தாக்கியதாக தெரிவித்துள்ளார். தாக்கியது தொடர்பாக பாண்டிபஜார் காவல் நிலையத்தில் கிருஷ்ணபிரசாத் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம்சாட்டினார். இதனால் தற்போது ஆதாரங்களை சமர்பித்து மதுவந்தியிடம் பணத்தை மீட்டு கொடுக்குமாறு காவல் ஆணையரிடம் புகார் அளித்ததாக தெரிவித்தார்.
இந்த மோசடி புகார் குறித்து மதுவந்தியிடம் பேசிய போது, psbb பள்ளி தங்களுடையது ஏன் பணம் வாங்க வேண்டும் எனவும் கிருஷ்ண பிரசாத் அளித்த புகார் முற்றிலும் பொய் என மறுப்பு தெரிவித்தார். மேலும் பணத்தை ஏமாற்றிவிட்டு தன் மீது கிருஷ்ணபிரசாத் பழி சுமத்துவதாகவும், உரிய ஆதாரங்களுடன் கிருஷ்ணபிரசாத் மீது கூடிய விரைவில் புகார் அளிக்க உள்ளதாக மதுவந்தி தெரிவித்தார்.
இதையும் படிங்க: CCTV:கார் மோதியதில் தூக்கி வீசப்பட்ட இளைஞர் - பதறவைக்கும் சிசிடிவி காட்சி