சென்னை: இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எழுதிய கடிதத்தில், "இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்டு, இலங்கை அரசின் கைவசம் உள்ள தமிழ்நாடு மீனவர்களுக்கு சொந்தமான மீன்பிடிப் படகுகளை ஏலம் விடுவதற்கு இலங்கை அரசின் மீன்வளம் மற்றும் நீரியல் வளத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இலங்கை அரசின் இந்த நடவடிக்கை சட்டத்திற்குப் புறம்பானது.
இந்த நடவடிக்கை உடனடியாகத் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். இலங்கை அரசு வாக்குறுதிக்கு மாறாக, எந்தவிதமான சட்ட ஆலோசனையும் இன்றி இந்த ஏல நடவடிக்கையை எடுத்துள்ளது. இந்த மீன்பிடிப் படகுகள் உரிய நீதித்துறை நடைமுறைகளைப் பின்பற்றி, பல்வேறு இலங்கை நீதிமன்றங்களால் விடுவிக்கப்பட்டவை.
இதனை கருத்தில்கொண்டு, இலங்கையால் முன்மொழியப்பட்ட ஏலத்தை மத்திய அரசு தலையிட்டு தடுத்து நிறுத்த வேண்டும். அதேபோல 2018ஆம் ஆண்டிற்கு முன்னர் சிறைபிடிக்கப்பட்ட 125 பழுது பார்க்க இயலாத நிலையில் உள்ள தமிழ்நாட்டுப் படகுகள் தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்பார்வையிட அலுவலர்களுக்கு உத்தரவிடவேண்டும். அதேபோல 2018ஆம் ஆண்டிற்கு பின்னர் 75 படகுகளுடன் மீன்பிடி உபகரணங்களையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: தமிழ் உணர்வை தூண்டி குளிர்காய நினைக்கும் ராகுல் காந்தி - பாரதி கவிதையை மேற்கோள் காட்டி பிரதமர் மோடி பேச்சு