சென்னை: கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த சென்னை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைப்பிடிக்காத தனி நபர்கள் மீதும், கடைகள் மீதும் தொடர்ச்சியாக அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், கடந்த ஏப்ரல் மாதம் 9ஆம் தேதி முதல் ஜூன் ஆறாம் தேதிவரை பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்கள், தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்காதவர்கள், வணிக வளாகங்கள், கடைகள் ஆகியவற்றில் விதிகளை பின்பற்றாத நபர்களிடமிருந்து 2 கோடியே 46 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி சார்பாக தெரிவிக்கப்பட்டது.
இன்று மட்டும்
அதன் தொடர்ச்சியாகவும், பல நடவடிக்கைகள் மாநகராட்சி சார்பில் தினசரி மேற்கொள்ளப்பட்டு அபராதத் தொகை வசூலிக்கப்பட்டு வருகிறது. இதில், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஊரடங்கு விதிமுறைகளை பின்பற்றாத காரணத்திற்காக இன்று ஒரே நாளில் 778 தனி நபர்கள், 170 கடைகளுக்கு சென்னை மாநகராட்சி சார்பில் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மொத்தம் ஜுன் 17ஆம் தேதி முதல் இன்று வரை 3,494 தனி நபர்களுக்கும், 693 கடைகளுக்கும் ஊரடங்கு விதிகளை மீறியதாக சென்னை மாநகராட்சி சார்பில் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் மாநகராட்சி மண்டல ஊரடங்கு அமலாக்க குழு தினமும் திருமண மண்டபங்களை ஆய்வு செய்து வருகிறது. அதன்படி இன்று மட்டும் 94 திருமண மண்டபங்களை அந்தக் குழு ஆய்வு செய்துள்ளது.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் 8000-க்குக் கீழ் குறைந்த கரோனா