மே 25ஆம் தேதி முதல் மதுரை விமான நிலையத்திலிருந்து சென்னை, பெங்களூரு, டெல்லி, திருவனந்தபுரம் ஆகிய பகுதிகளுக்கு விமான சேவை தொடங்கப்பட்டது. மதுரை விமான நிலையத்தில் மத்திய பாதுகாப்புப் படை வீரர்கள் சுழற்சி முறையில் 250க்கும் மேற்பட்டோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், ஜூன் 4ஆம் தேதி முதல் மத்திய தொழில் பாதுகாப்புப் படை முகாமில் தங்கி பணிபுரியும் வீரர்களுக்கு ரத்தம், சளி மாதிரி பரிசோதனை செய்யப்பட்டது. இதில், ஒருவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அவர் மதுரை அரசு மருத்துவமனையில் உள்ள கரோனா சிறப்புப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். மத்திய தொழில் பாதுகாப்புப் படை முகாமிற்கு கிருமிநாசினி தெளிக்கப்பட்டு, தீவிர கண்காணிப்பில் சுகாதாரத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இதேபோல், வெளிநாட்டிலிருந்து சிறப்பு விமானம் மூலம் துபாயிலிருந்து ஜுன் 4ஆம் தேதி மதுரைக்கு 179 பேர் அழைத்து வரப்பட்டனர். அவர்களுக்கு சுகாதாரத் துறை சார்பில் கரோனா தொற்று பரிசோதனை நடைபெற்றது.
இதில், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த இருவர், புதுக்கோட்டை, தென்காசியில் தலா ஒருவர் என மொத்தம் நான்கு பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. அவர்கள் கரோனா சிறப்பு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இதையும் படிங்க: இந்தியா வந்த 269 பேர்... விமான நிலைய அலுவலர்கள், பயணிகளிடையே வாக்குவாதம்...!