சென்னை எண்ணூர் காமராஜர் துறைமுகம் மூலம் 20 லட்சம் டன் நிலக்கரியை, வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்வதற்கான ஒப்பந்த அறிவிப்பை, கடந்த ஜனவரி 18 ஆம் தேதி தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் இணையதளம் மூலம் வெளியிட்டது. டெண்டர் திறப்பு நடைபெற உள்ள நிலையில், அதற்கு தடை விதிக்கக் கோரி, தூத்துக்குடியில் தனியார் நிலக்கரி நிறுவனத்தை சேர்ந்த திருமலைச்சாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அதில், ”2 கோடி ரூபாய்க்கு மேலான ஒப்பந்தங்களில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க குறைந்தபட்சம் 30 நாட்கள் வழங்க வேண்டும் என, டெண்டர் வெளிப்படை சட்டத்தில் விதி இருக்கிறது. ஆனால் 1,330 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த டெண்டருக்கு 15 நாட்கள் மட்டுமே தரப்படுகிறது. வெளிநாட்டு நிறுவனங்கள் எளிதில் டெண்டர் எடுக்கும் வகையில், தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் விதிகளை மாற்றியிருக்கிறது.
இந்த டெண்டர் உள்நாட்டு நிறுவனங்கள் பங்கேற்காத வகையிலும், அதே சமயத்தில் வெளிநாட்டு நிறுவனங்கள் பங்கேற்கும் வகையிலும் வெளியிடப்பட்டுள்ளதால், இதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
வழக்கை விசாரித்த நீதிபதி புகழேந்தி, டெண்டரை ரத்து செய்ய முடியாது என்று மறுத்தும், தமிழக அரசு மேலும் 15 நாட்கள் கால அவகாசம் வழங்கியுள்ளதால், டெண்டர் அறிவிப்பை இந்திய வர்த்தக இதழ்களில் வெளியிட உத்தரவிட்டும் வழக்கை முடித்து வைத்தார். இந்த உத்தரவை எதிர்த்து மனுதாரர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டை, தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி, நீதிபதி செந்தில் குமார் ராம்மூர்த்தி அமர்வு விசாரித்தது.
அப்போ, டெண்டருக்கான கால அவகாசம், ஏற்கனவே 15 நாட்கள் நீடிக்கப்பட்டுள்ளதாகவும், வர்த்தக இதழில் வெளியிடப்பட்டுள்ளதாகவும் நீதிபதிகள் தெரிவித்ததோடு, மனுதாரருக்கு வழக்குத் தொடர தகுதியில்லை என்றும் கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.
இதையும் படிங்க: கார் ஓட்டுநர்களுக்கு தபால் வாக்கா? - உயர் நீதிமன்றம் மறுப்பு!