பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 2019-20 ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்தார். கார்ப்பரேட் வரி 30 விழுக்காட்டில் இருந்து 25 விழுக்காட்டுக்கு குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வருடத்திற்கு ரூ. 400 கோடிக்கு மேல் வியாபாரம் செய்யும் கார்ப்பரேட் நிறுவனங்கள் தற்போது 25 விழுக்காடு கார்ப்பரேட் வரி செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக வருடத்திற்கு ரூ.250 கோடிக்கு மேல் வியாபாரம் செய்யும் நிறுவனங்கள் 25 விழுக்காடு கார்ப்பரேட் வரி செலுத்தி வந்தது. இதனால் 0.7 நிறுவனங்கள் 30 விழுக்காடு கார்ப்பரேட் வரி செலுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இது அவர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை தந்துள்ளதாக பார்க்கப்படுகிறது.
அதேபோல், ரூ. 2 கோடி முதல் ரூ.5 கோடி வரை வருமானம் உள்ளவர்களுக்கு மூன்று விழுக்காடு வரியும், ரூ. 5 கோடிக்கு மேல் வருமானம் உள்ளவர்கள் ஏழு விழுக்காடு வரியும் உயர்த்தப்பட்டுள்ளது. பெரும் நிறுவனங்களை வைத்துள்ள பணக்காரர்களுக்கு இது தலைவலியை ஏற்படுத்தியுள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதனால் பங்குச்சந்தை நேற்று சரிவில் முடிந்தது. சென்செக்ஸ் 394.67 புள்ளிகள் சரிந்து 39,513 புள்ளிகளிலும், நிஃப்டி 136 புள்ளிகள் சரிந்து 11,811 புள்ளிகளிலும் உள்ளது.