37ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திற்குமுன், செய்தியாளர்களை சந்தித்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு பல்வேறு வரிச்சலுகைகளை அறிவித்தார். உபரி வரிவசூல் சேர்த்து மொத்தம் 35 சதவிகிதமாக இருந்த பெருநிறுவனங்களுக்கான வருமான வரி, தற்பொழுது 25.20 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல் அக்டோபர் 1ஆம் தேதிக்குப் பிறகு தொடங்கப்படும் உற்பத்தி நிறுவனங்களுக்கு 15% மட்டுமே வரி விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்புகளை அடுத்து, பங்குச் சந்தைகள் இன்று மிகப்பெரிய அளவில் ஏற்றம் கண்டன. அரசின் இந்த புதிய அறிவிப்பை தொழில்துறையினர் வரவேற்றுள்ளனர்.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள எம்.சி.சி.ஐ (Madras Chamber of Commerce & Industry) தலைவர் ராம்குமார் ராமமூர்த்தி, ”தற்போதைய உலக பொருளாதார சூழல் சரியான வகையில் இல்லை. இந்தியாவில் அதிக வரி விதிக்கப்படுவதால், அமெரிக்க, சீன வர்த்தகப் போரினால் சீனாவில் இருந்து வெளியேறும் நிறுவனங்கள்கூட இந்தியாவை நோக்கி வருவதில்லை. அதேநேரத்தில் மலேசியா, தாய்லாந்து, வியட்நாம், இந்தோனேசியா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு 19 முதல் 24 சதவிகிதம் வரையே வரி விதிக்கப்படுவதால், சீனாவில் இருந்து வெளியேறும் முதலீடுகள் எல்லாம் அங்கே சென்றுவிடுகின்றன. தற்பொழுது கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான வரி குறைக்கப்பட்ட பின்பு, இந்த முதலீடுகள் இந்தியா வருவதற்கான வாய்ப்புகள் பெருமளவு அதிகரித்துள்ளது” என கருத்துத் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் இந்த முடிவு மிகச் சரியான நேரத்தில் எடுக்கப்பட்டது என்று கூறியுள்ள ராம்குமார் ராமமூர்த்தி, இதனால் புதிய முதலீடுகள் வருவதோடு, வேலைவாய்ப்புகள் பெருகி ஏற்றுமதியும் அதிகரிக்கும் என்று கூறியுள்ளார்.