அறந்தாங்கி - காரைக்குடி சாலையில் அமைந்துள்ள சுதந்திரபுரம் சோதனைச்சாவடியில் கே.புதுப்பட்டி உதவி ஆய்வாளர் வேலுச்சாமி, தனிப்பிரிவைச் சேர்ந்த காவலர் வினோத் உள்ளிட்ட காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அச்சமயம் புதுக்கோட்டையில் இருந்து காரைக்குடி சென்ற வேனை காவல் துறையினர் நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது, வேனில் 400 கிலோ குட்கா பதுக்கி கொண்டுவரப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து வேன் ஓட்டுநரான பூவரசக்குடியைச் சேர்ந்த ஆனந்த் (28) என்பவரைக் காவல் துறையினர் கைது செய்து விசாரித்தனர்.
அதில், சிக்கிய குட்கா பாக்கெட்டுகள் புதுகையில் உள்ள ஒரு குடோனில் இருந்து ஏற்றி சிவகங்கை மாவட்டம் புதுவயலுக்கு கொண்டுசெல்லப்பட்டதாக அவர் ஒப்புக்கொண்டுள்ளார். இதையடுத்து போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், பறிமுதல் செய்யப்பட்ட குட்கா பாக்கெட்டுகளின் மதிப்பு சுமார் 80 ஆயிரம் ரூபாய் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.