செங்கல்பட்டு மாவட்டம், வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் இந்தியாவில் முக்கிய சரணாலயங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த சரணாலயத்திற்கு உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து நத்தை, குத்தி நாரை, சாம்பல் நாரை, கூழைகடா, பாம்புதாரா, வெள்ளை அரிவாள் மூக்கன், கரண்டிவாயன், மஞ்சள் மூக்கு நாரை உள்ளிட்ட 27 வகையான அரிய இன பறவைகள் ஆண்டுதோறும் இனப்பெருக்கத்துக்காக வருகின்றன.
தற்போது சரணாலயத்தின் பரப்பளவை குறைக்க தமிழ்நாடு அரசு முடிவு எடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. வேடந்தாங்கல் சரணாலயத்தின் பரப்பளவைக் குறைக்க தடை விதிக்கக் கோரி சென்னை சூளைமேட்டை சேர்ந்த வழக்கறிஞர் எஸ். ஸ்டாலின் ராஜா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், "ஒரு தனியார் மருந்து தொழிற்சாலையின் விரிவாக்கத்திற்காக இந்த சரணாலயத்தின் பரப்பளவை 5 கிலோ மீட்டரில் இருந்து 3 கிலோ மீட்டராக குறைத்து அறிவிப்பதற்கான கருத்துருவை தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை முதன்மைச் செயலாளர் ஷம்பு கல்லோலிகர், தேசிய விலங்குகள் நல வாரியத்துக்கு கடந்த மார்ச் 19ஆம் தேதி அனுப்பினார்.
தனியார் நிறுவனத்திற்காக சட்ட விதிகளுக்கு முரணாக இயற்கையாக அமைந்துள்ள சரணாலயத்தின் பரப்பளவை குறைப்பது தவறான செயலாகும். இதனால், சரணாலயத்திற்கு வரும் பறவைகளின் வரத்து குறைந்துவிடும். சம்மந்தப்பட்ட நிறுவனத்தால் தினமும் 1.76 லட்சம் லிட்டர் தண்ணீர் எடுக்கப்படுவதால் நிலத்தடி நீர் குறைந்துவிடும். இதனால், சுற்றுச்சூழல் பாதிக்கப்படும். வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தின் பரப்பளவை குறைத்து மாற்றி அறிவிப்பதற்கும், தொழிற்சாலையை விரிவுபடுத்தும் திட்டத்திற்கு அனுமதி வழங்குவதற்கும் தடை விதிக்க வேண்டும். விதிமுறைகளுக்கு முரணாக சரணாலயப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறும் தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட வேண்டும்" என்று கோரியுள்ளார்.
இந்த மனு நீதிபதிகள் சுப்பையா மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய அமர்வின் முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு அரசு தரப்பில் வாதாடிய வழக்குரைஞர், "பத்திரிகை செய்திகளின் அடிப்படையில் வைக்கப்பட்டிருக்கும் இந்த குற்றச்சாட்டுக்கு எந்த ஒரு ஆதாரமும் இல்லை. இந்த வழங்கு விளம்பரத்திற்காக தொடரப்பட்டுள்ளது.
அந்த பகுதியில் இயங்கும் தனியார் நிறுவனத்தையும், மத்திய அரசையும் ஏன் எதிர்மனுதாரர்களாக சேர்க்கவில்லை" என கேள்வி எழுப்பினார். இந்த வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், விளம்பரத்திற்காக இந்த வழக்கு தொடர்ந்திருந்தால் அபராதத்துடன் மனுவை தள்ளுபடி செய்வோம் என தெரிவித்தனர். மேலும், இந்த வழக்கில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தையும், தனியார் மருந்து நிறுவனத்தையும் எதிர் மனுதாரர்களாக சேர்க்க மனுதாரருக்கு உத்தரவிட்டு விசாரணையை ஜூலை 2ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.