கன்னியாகுமரி மாவட்ட அனைத்து டாஸ்மாக் பணியாளர் சங்கங்களின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செண்பகராமன்புதூர் டாஸ்மாக் அலுவலகம் முன்பு கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தொழிலாளர் முன்னோற்ற சங்கத்தின் மாநில துணைச் செயலர் இளங்கோ தலைமை வகித்தார். தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் மாவட்ட தலைவர் நடேசன் , ஏ.ஐ.டி.யு.சி டாஸ்மாக் பணியாளர் சங்கத்தை சார்ந்த மால்டன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
டாஸ்மாக் கடை பணியாளர்களை உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும். கரோனாவால் மதுரை வடக்கு மாவட்டத்தில் மரணமடைந்த பணியாளர் வேல்முருகன் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் நிதி உதவி வழங்க வேண்டும். அவரின் குடும்பத்தில் ஒருவருக்கு வாரிசு அடிப்படையில் அரசு வேலை வழங்க வேண்டும்.
தற்பொழுது பணிபுரியும் பணியாளர் அனைவருக்கும் பாதுகாப்பு கவச உடை வழங்க வேண்டும். அனைத்து பணியாளர்களுக்கும் ரூ.50 லட்சத்திற்கான காப்பீடு செலுத்த வேண்டும். அந்தக் காப்பீடு தொகைக்கான மாதாந்திர கட்டணத்தை அரசே செலுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்து டாஸ்மாக் சங்கத்தை சேர்ந்த பலர் கலந்துகொண்டனர்.