சேலம் மாவட்டம், எடப்பாடி சட்டப் பேரவை தொகுதிக்குட்பட்ட நங்கவள்ளி ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட பகுதிகளில் இருந்து பெண்கள் உட்பட இளைஞர்கள் சுமார் 500க்கும் மேற்பட்டோர் மாணவரணி செயலாளர் வெங்கடேஷ் தலைமையில் அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
இன்று (ஜூலை20) நங்கவள்ளி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஆவடத்தூர், தோரமங்கலம், சூரப்பள்ளி, இருப்பாளி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் இருந்து பெண்கள் உள்பட இளைஞர்கள் மிகுந்த ஆர்வத்துடன் அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
இவ்விழாவில் கலந்து கொண்ட அனைவரையும் மாணவரணி செயலாளர் வெங்கடேஷ் பொன்னாடை போத்தி வரவேற்றார். இதைத்தொடர்ந்து, சேலம் புறநகர் மாவட்ட விவசாய அணி செயலாளர் செல்லதுரை பேசும்போது, "முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, எடப்பாடி சட்டப் பேரவை தொகுதிகளில் பல்வேறு நலத்திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்.
அவருக்கு நன்றிக்கடன்பட்டவர்களாக நாம் இருக்க வேண்டும்" என புதிய உறுப்பினர்களிடம் கேட்டுக்கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் சேலம் மாவட்ட அதிமுக தெற்கு ஒன்றிய செயலாளர் செல்வம் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: கரோனாவுக்கு 'குட்-பை' சொன்னார் அமைச்சர் தங்கமணி!