தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த செல்வராணி என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தார்.
அதில், "சாத்தான்குளம் மார்க்கெட்டில் எங்களுக்கு சொந்தமான செல்போன் கடை உள்ளது . கடந்த 19ஆம் தேதி இரவு கடையை விரைவாக அடைக்குமாறு சாத்தான்குளம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ரகு கணேஷ், தலைமை காவலர் முருகன் ஆகியோர் கூறியுள்ளனர் . பின்னர், கடையில் இருந்த எனது கணவர் ஜெயராஜை கைது செய்து அழைத்துச் சென்றனர். தகவலறிந்து எனது மகன் பென்னீஸ் காவல் நிலையத்திற்கு சென்று விசாரித்தார். அப்போது, காவல்துறையினர் எனது கணவர் மற்றும் மகனை கடுமையாக தாக்கினர்.
பின்னர் இருவரையும் பொய் வழக்கில் கைது செய்து சாத்தான்குளம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். தகுந்த இடைவெளி காரணமாக இருவரையும் மாஜிஸ்திரேட்டிம் பேச அனுமதிக்கவில்லை. தாக்குதலில் காயமடைந்த நிலையில் எந்தவித சிகிச்சையும் வழங்காமல் கோவில்பட்டி கிளைச்சிறையில் அடைத்தனர். இதன் காரணமாகவே இருவரும் உயிரிழந்தனர். இருவரது மரணத்திலும் சந்தேகம் உள்ளது. இருவரது உடலையும் மூன்று மருத்துவர்களுக்கு குறையாத குழுவினர் உடற்கூறாய்வு செய்யவும், அதை வீடியோவில் பதிவு செய்யவும், அவற்றை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும் உத்தரவிட வேண்டும்” எனக் கூறியிருந்தார்.
இந்த மனுவை நேற்று (ஜூன் 23) அவசர வழக்காக விசாரித்த நீதிபதி பி.புகழேந்தி, இருவரது உடலையும் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் மூன்று மருத்துவர்களைக் கொண்ட குழுவினர் உடற்கூறாய்வு செய்ய வேண்டும். அதை முழுமையாக வீடியோவில் பதிவு செய்ய வேண்டுமென உத்தரவிட்டார்.
இந்த வழக்கை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது. இந்த வழக்கு இன்று (ஜூன் 24) நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, தென் மண்டல காவல் துறை தலைவர் ஷண்முக ராஜேஸ்வரன், தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபல் ஆகியோர் காணொலி மூலம் ஆஜராகினர்.
அப்போது தென் மண்டல காவல் துறை தலைவர், காவல் உதவி ஆய்வாளர் பால கிருஷ்ணன், ரகு கணேஷ் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இரண்டு தலைமை காவலர்கள் முருகன், முத்துராஜ் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.
இதையடுத்து நீதிபதிகள், கோவில்பட்டி மாஜிஸ்திரேட் பாரதிதாசன் விசாரிப்பதற்கு, மாவட்ட நிர்வாகம் அனைத்து வசதிகளையும் ஏற்பாடு செய்து தரவேண்டும், அதில் எவ்வித குறுக்கீடும் இன்றி விசாரணை நடத்த வேண்டும். அனைத்து சாட்சிகளிடம் விசாரணை நடத்தி முடித்த பின்பு, உடற்கூறாய்வு செய்ய வேண்டும். அப்போது முழுமையாக வீடியோ பதிவு செய்ய வேண்டும்.
கரோனாவால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் காவல்துறையினர் பொதுமக்களிடம் கடுமையாக நடந்து கொள்ளக்கூடாது. உடனடியாக வழக்கு பதிவு போன்ற நடவடிக்கைகளையும் எடுக்கக் கூடாது. முதலில் அவர்களுக்கு விழிப்புணர்வு செய்ய வேண்டும்” எனத் தெரிவித்தனர்.
மேலும், இந்த வழக்கு தொடர்பாக தூத்துக்குடி காவல் துறை கண்காணிப்பாளர் ஜூன் 26ஆம் தேதிக்குள் நிலை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், எதிர்காலத்தில் இது போன்ற சம்பவங்கள் நிகழாமல் இருக்க டிஜிபி உரிய உத்தரவு பிறப்பிக்கலாம் என்று கருத்து தெரிவித்தனர்.