திருவண்ணாமலை காவல் துறை கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்தி உத்தரவுபடி, தலைமைக் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அசோக் குமார் மேற்பார்வையில், செங்கம் உள்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சின்னராஜ் தலைமையில் செங்கம் வட்ட காவல் ஆய்வாளர் சாலமன் ராஜா, புதுப்பாளையம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் லதா மற்றும் காவல் துறை இணைந்து தேடுதல் வேட்டை நடத்தினர்.
அந்த வகையில் புதுப்பாளையம் பேருந்து நிலையம் பகுதியில் கள்ளத்தனமாக லாட்டரி சீட்டு விற்றுவந்த செங்கம் தாலுகா பெரியேரி கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்பவரை சோதனை செய்தனர்.
இதைத் தொடர்ந்து, காவல் துறையினர் மேற்கொண்ட சோதனையின்போது கோவிந்தராஜ் என்பவர் 212 லாட்டரி சீட்டுகள் விற்பனைக்காக வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்துவந்த கோவிந்தராஜ் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
மேலும் மாவட்டம் முழுவதும் காவல் துறையினர் கள்ளச்சாராய வேட்டை நடத்தியதில், 15 லிட்டர் கள்ளச்சாராயம் , 180 மில்லி கொள்ளளவு கொண்ட 23 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்து, அவற்றை விற்பனைக்காக கடத்திய இருவர் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மேலும், கடத்தலுக்கு பயன்படுத்திய 2 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்துள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.