இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில், ”தமிழ்நாடு முழுவதும் சவுடு, உவரி, வண்டல் மண் அள்ள அனுமதி வாங்கி, சட்ட விரோதமாக மணல் கொள்ளை நடைபெறுகிறது. அதில் முக்கியமாக வைகை, காவிரி, பாலாறு ஆகிய ஆறுகளில் அதிகப்படியாக சட்ட விரோத மணல் கொள்ளை நடைபெறுகிறது. இதனால் ஆறுகளில் தண்ணீர் செல்வதற்கு தடை ஏற்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் சுமார் 60க்கும் மேற்பட்ட சட்டவிரோத மணல் குவாரிகள் இயங்குகின்றன. இதுதொடர்பாக அலுவலர்களிடம் பல முறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. மேலும் வறட்சி மாவட்டங்களான விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் சட்ட விரோத மணல் கொள்கை அதிகளவில் நடைபெறுகிறது. இதனால் இந்த மாவட்டங்களில் விவசாயம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
அரசிடம் அனுமதி வாங்கி நடத்தப்படும் மணல் குவாரியை அலுவலர்கள் ஆய்வுசெய்ய வேண்டும் என விதி உள்ளது. ஆனால் அலுவலர்கள் எவ்வித ஆய்வும் நடத்துவதில்லை. எனவே தமிழ்நாடு சிறு கனிம சலுகை விதி 1959இன் படி விதி எண் 38Aஐ தீவிரமாக நடைமுறைப்படுத்த வேண்டும். டாஸ்மாக்கைப் போல் (TAMSAC) மணல் விற்பனைக்கு தமிழ்நாடு மணல் கழகம் (TAMSAC) தொடங்க வேண்டும். அதன்மூலம் மணல் விற்பனை நடைபெற வேண்டும்.
மேலும் அரசு மற்றும் தனியார் நிலங்களில் சவுடு, உவரி, வண்டல் மண் அள்ளுவதற்கு அனுமதிக்க தடைவிதித்து உத்தரவிட வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் சத்யநாராயனன், ராஜமாணிக்கம் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஜூலை 23ஆம் தேதிக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.