மயிலாப்பூர் பகுதியில் ஜன்னல் பஜ்ஜி கடை என்னும் கடை மிகவும் பிரபலமானது. இந்தக் கடையின் உரிமையாளர் ரமேஷ், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார் என செய்திகள் வெளியானது. சமூக வலைதளங்களிலும் பலர் பஜ்ஜி கடை பற்றிய நினைவுகளைப் பகிர்ந்து வருத்தத்தைத் தெரிவித்துவந்தனர்.
இந்நிலையில், ரமேஷ் தான் கரோனா தொற்றால் இறக்கவில்லை என்றும், மரணம் அடைந்தது தன்னுடைய சகோதரர் சிவராமகிருஷ்ணன் என்றும் விளக்கம் அளித்துள்ளார். தன் சகோதரர் தேனாம்பேட்டையில் பணி செய்துவருவதாகவும், மாலை நேரங்களில் தனக்கு உதவிகள் செய்துவந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
”உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு திடீரென்று மூச்சுத் திணறல் ஏற்பட்டு மரணம் அடைந்தார். கரோனா பரிசோதனை செய்ததில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. தற்போது சகோதரர் மரணத்தால் கடை மூடி இருக்கிறது. விரைவில் கடை திறக்கப்படும்” என்றார்.