அரசால் 2013 ஆம் ஆண்டு தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா உள்ளிட்ட போதைப் பொருள்கள் கடைகளில் காவல்துறை உதவியோடு விற்பனை செய்வதாக குற்றம் சாட்டி, அதை அரசின் கவனத்திற்கு கொண்டு வருவதற்காக திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட 21 திமுக எம்எல்ஏக்கள் சட்டப்பேரவைக்கு 2017 ஆம் ஆண்டு குட்கா பாக்கெட்டுகளை கொண்டு சென்றனர்.
இதுதொடர்பாக சட்டப்பேரவை உரிமைக் குழு அனுப்பிய நோட்டீசை ரத்து செய்யக்கோரி ஸ்டாலின் உள்ளிட்ட 21 திமுக எம்எல்ஏ கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அப்போது ஜெ அன்பழகன், கேபிபி சாமி ஆகியோர் மரணமடைந்த நிலையில் மற்றவர்கள் மீதான வழக்கை தலைமை நீதிபதி ஏபி சாஹி அமர்வு விசாரித்து சென்ற ஆகஸ்டு 25ஆம் தேதி தீர்ப்பளித்தது.
அந்தத் தீர்ப்பில், “ 2017 ஆம் ஆண்டு அனுப்பப்பட்ட நோட்டீஸ் நடைமுறைகளில் அடிப்படை தவறுகள் உள்ளதால் அதை ரத்து செய்து உத்தரவிட்டது. மேலும், பேரவை உரிமைக் குழு விருப்பப்பட்டால் புதிய நோட்டீஸ் அனுப்பலாம். திமுக எம்எல்ஏக்கள் அவர்களின் கருத்துக்களை குழுவிடம் முன்வைக்கலாம்” என உத்தரவிட்டிருந்தனர்.
இந்நிலையில் சட்டப்பேரவை உரிமைக்குழு இரண்டாவது முறையாக செப்டம்பர் 7 ஆம் தேதி பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் கூடியது. அப்போதும் திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட 18 எம்எல்ஏக்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு, சட்டப்பேரவை தொடங்கவுள்ள செப்டம்பர் 14ஆம் தேதியன்று பதிலளிக்க உத்தரவிட்டது.
இந்த நோட்டீஸை எதிர்த்து ஸ்டாலின் உள்ளிட்ட 18 பேரும் மீண்டும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். அதில் ,"சட்டப்பேரவை கூட்டத் தொடர் தொடங்க உள்ள நிலையில் தங்களை பங்கேற்க விடாமல் தடுக்கின்றனர். கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் அரசு தவறாக கையாண்ட விவகாரத்தை சட்டப்பேரவையில் குரல் எழுப்புவதை தடுக்கும் வகையில் உள்ளது" என குறிப்பிட்டுள்ளனர்.
இந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி ரவிச்சந்திர பாபு வழக்கை நாளை (செப்.17) விசாரிப்பதாக ஒப்புதல் அளித்துள்ளார்.