அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் கிராமத்தில் ஓய்வு பெற்ற தபால்காரரும் அவரது மனைவியும் தனியாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று (ஜூலை 23) இரவு அவரது மனைவி வீட்டின் உள்ளே தூங்கிக்கொண்டிருந்தார், கணவர் வெளியே தூங்கிகொண்டிருந்தார்.
பின்னர் அதிகாலையில் அவரது மனைவி எழுந்து பார்த்தபோது அனைத்துக் கதவுகளும் திறந்திருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்து தனது கணவரை எழுப்பியுள்ளார். பின்பக்கம் சென்று பார்த்தபோது வீட்டின் காம்பவுண்டில் போடப்பட்டிருந்த கம்பி வலைகள் வளைக்கப்பட்டிருந்தன. பின்னர் சோதனை செய்து பார்த்ததில் பீரோவில் இருந்த 30 சவரன் நகை கொள்ளை போனது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து உடனே விக்கிரமங்கலம் காவல் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த விக்கிரமங்கலம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.