திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு வனச்சரகர் அலுவலகம் சித்தூர் வனப்பகுதியில் அமைந்துள்ளது. இந்த வனச்சரகத்திற்குட்பட்டப் பகுதியில் அடையாளம் தெரியாத நபர்கள் முயல்களை வேட்டையாடி வருவதாக வத்தலக்குண்டு வனச்சரகர் அலுவலகத்தினருக்குத் தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் வனத்துறையினர் தீவிர ரோந்துப் பணியில் இறங்கினர்.
அப்போது நிலக்கோட்டை அருகேயுள்ள போடியகவுண்டன்பட்டி கிராமத்தின் வடபகுதி, ஓடைப் பகுதியில் சுருக்கு கம்பி, கண்ணி வலைகளைப் பயன்படுத்தி, முயல்களை வேட்டையாட முயற்சிப்பதாக, வத்தலக்குண்டு வனச்சரக அலுவலர் செந்தில் குமாருக்குத் தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற வனத்துறையினர் அங்கு முயலை வேட்டையாட வைக்கப்பட்டிருந்த சுருக்கு கம்பி, கண்ணி வலைகளைக் கைப்பற்றினர். தொடர்ந்து வனச்சரகர் அய்யனார் செல்வம், வனக்காப்பாளர்கள் முத்துகுமாரன், பீட்டர் ராஜா, கோவிந்தராஜ் ஆகியோர் அப்பகுதியில் பதுங்கி இருந்த கீழத்தெப்பத்துபட்டி கிராமத்தைச் சேர்ந்த தங்கமலை, அழகர், நடகோட்டை கிராமத்தைச் சேர்ந்த பரமசிவன் ஆகியோரைக் கைது செய்தனர்.
மேலும் மூவருக்கும் தலா 15,000 வீதம், 45,000 ரூபாய் அபராதத் தொகை விதிக்கப்பட்டு, வன உயிரின பாதுகாப்புச் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. பின்னர் எச்சரித்து அனுப்பப்பட்டனர்.