நாட்டின் முன்னணி செய்தியாளரான வினோத் துவா உடல்நலக் குறைவால் இன்று காலமானார். அப்பலோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த அவர் இன்று உயிரிழந்ததாக அவரது மகள் மல்லிகா துவா தெரிவித்தார்.
தூர்தர்ஷன், என்டிடிவி உள்ளிட்ட முன்னணி தொலைக்காட்சி ஊடகத்தில் பணியாற்றிய வினோத் துவா, நாட்டின் மிக உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம ஸ்ரீ விருதை வென்றுள்ளார்.
ஊடகத்துறையின் உயரிய விருதான ராம்நாத் கோயங்கா விருதையும் இவர் வென்றுள்ளார். இவரும் இவரது மனைவியும் கோவிட்-19 இரண்டாம் அலையின்போது கரோனா பாதிப்புக்குள்ளாகினர்.
சிகிச்சை பலனின்றி அவரது மனைவி ஜூன் மாதம் உயிரிழந்தார். இந்நிலையில், கரோனாவிலிருந்து மீண்டுவந்த வினோத் துவாவுக்கு உடல்நலக் குறைவு தொடர்ந்துவந்தது.
இதன் காரணமாக தொடர் மருத்துவ சிகிச்சையில் இருந்த துவா தற்போது காலமானார். அவரது இறுதி சடங்கு நாளை டெல்லியில் உள்ள லோதி மைதானத்தில் நடைபெறும் என அவரது மகள் மல்லிகா தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: Omicron India cases: குஜராத்தில் ஒருவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு