அலிகார்க் : உத்தரபிரதேசத்தில் 5 வயது குழந்தையின் வயிற்றில் இருந்து 12 கிலோ எடையிலான கட்டியை அரிய வகையிலான அறுவை சிகிச்சை மூலம் மருத்துவர்கள் நீக்கி உள்ளனர்.
உத்தரபிரதேச மாநிலம் புலந்தஷாஹர் மாவட்டத்தை சேர்ந்த தம்பதிக்கு 5 வயதில் குழந்தை உள்ளது. கடந்த சில நாட்களாக குழந்தை அடிக்கடி நோய்வாய்ப்பட்டதாகவும், ஒவ்வாமையுடன் காணப்பட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் வழக்கத்திற்கு மாறாக 5 வயது குழுந்தைக்கான உடல்வாகுவை மீறி அந்த குழந்தை காணப்பட்டு உள்ளது.
இதனால் பதறிப்போன பெற்றோர் அலிகார்க்கின் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக குழந்தையை அனுமதித்து உள்ளனர். குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் வயிற்றில் கட்டி இருப்பதை ஸ்கேன் மூலம் கண்டறிந்து உள்ளனர். தொடர்ந்து ஆய்வுக்குட்படுத்தியதில் குழந்தை சிஸ்டிக் டெரடோமா என்ற பிறவி நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதை கண்டறிந்தனர்.
திசுக்களில் ஏற்பட்டும் பாதிப்புகள் காரணமாக இந்த சிஸ்டிக் டெரடோமா வகை நோய்களின் பாதிப்பு இருக்கும் எனக் கூறப்படுகிறது. இதன் காரணமாக வயதுக்கு மீறிய அளவில் குழந்தையின் வளர்ச்சி இருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர். இதையடுத்து தனியார் மருத்துவமனையில் உள்ள 4 அறுவை சிகிச்சை நிபுணர்கள் குழு குழந்தைக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டனர்.
4 மணி நேரம் நடைபெற்ற அறுவை சிகிச்சையின் இறுதியில் குழந்தையின் வயிற்றில் இருந்த 12 கிலோ எடையிலான கட்டி அகற்றப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர். அறுவை சிகிச்சைக்கு பின்னர் குழந்தை நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும், தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டு உள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க : The Kerala Story : தி கேரளா ஸ்டோரி படத்தின் தடை நீக்கம்.. தமிழ்நாடு அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!