புதுச்சேரியில் வேகமாகப் பரவிவரும் கரோனா பரவலின் இரண்டாவது அலையைக் கட்டுப்படுத்தவும் ஏழை மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.
இதன் ஒரு பகுதியாக அரசு பாண்லே பாலகம் மூலம் மலிவு விலையில் சுகாதாரமான உணவு வழங்கும் திட்டத்தை கதிர்காமம் இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரியில் பாலகத்தில் துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தொடங்கிவைத்தார்.
இந்த மலிவு விலை உணவுத் திட்டத்தின் மூலம் ஒரு பொட்டலம் சாம்பார் சாதம் ஐந்து ரூபாய்க்கு வழங்கப்படுகிறது. ஏழை மக்களின் நலன்கருதி நான்கு வகையான உணவுகள் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. எலுமிச்சை, தயிர், சாம்பார், வெஜிடபிள் பிரியாணி தலா ஐந்து ரூபாய்க்கும் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
![புதுச்சேரியில் மலிவு விலையில் உணவு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/11:29:25:1619848765_tn-pud-03-governor-food-tn10044_01052021092607_0105f_1619841367_674.jpg)
புதுச்சேரி இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரி, ராஜிவ் காந்தி மருத்துவமனை, புதுச்சேரி பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் உள்ள நான்கு பாலகங்களில் இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மக்களின் வரவேற்பைப் பொறுத்து மற்ற பகுதிகளில் உள்ள அரசு பாலகங்களில் இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்படும்.