முன்னாள் மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் காலமானார் என காங்கிரஸ் எம்.பி சசிதரூர் தனது ட்விட்டரில் பதிவிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், இதில் உண்மை இல்லை என பா.ஜ.க. மூத்த தலைவர் கைலாஷ் விஜய்வர்க்கியா ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
அதில், மக்களவையின் முன்னாள் சபாநாயகரும், பா.ஜ.கவின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுமித்ரா மகாஜன் நலமுடன் உள்ளார். அவரை பற்றிய மரணச் செய்திகள் வெறும் வதந்தியே எனக் குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து, சசிதரூர் தனது ட்வீட்டை டெலிட் செய்துவிட்டு புதிய ட்வீட்டை பதிவிட்டிருந்தார். அந்தப் பதிவில், "நன்றி கைலாஷ், நான் ட்வீட்டை டெலிட் செய்துவிட்டேன். பொய்யான செய்திகளைப் பரப்ப மக்கள் ஏன் ஆர்வம் காட்டுகிறார்கள் என தெரியவில்லை. சுமித்ரா ஜியின் உடல்நலம் மற்றும் நீண்ட ஆயுளுக்கு எனது பிரார்த்தனை எனக் குறிப்பிட்டிருந்தார்.
இதுமட்டுமின்றி, வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சுமித்ரா மகாஜன் மகன் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், எனது அம்மா நலமுடன் இருக்கிறார். தயவுசெய்து அவர்கள் குறித்து தவறான செய்திகள் பரப்பப்படுவதை நம்ப வேண்டாம். அவரது கோவிட்-19 பரிசோதனையில் நெகட்டிவ் தான் வந்துள்ளது. மாலையில் தான் அம்மாவைச் சந்தித்தேன். ஆரோக்கியமாக இருக்கிறார்கள் எனத் தெரிவித்திருந்தார்.
இதுதொடர்பாக பேசிய சுமித்ரா மகாஜன், "நான் இறந்துவிட்டதாகக் கிடைத்த தகவலை, உள்ளூர் நிர்வாகத்துடன் உறுதிப்படுத்தாமல், ஊடகத்தில் ஏன் தெரிவித்தார்கள். ஒரு தகவலை உறுதிப்படுத்தாமல் அறிவிப்பதில் என்ன அவசரம்" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதையும் படிங்க: சோலார் பேனல் முறைகேடு - சரிதா நாயர் கைது!