நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் நடைபெற்றுவருகிறது. இன்று மாநிலங்களவையில் சிபிஐ, அமலாக்கத்துறையின் இயக்குனர்களின் பதவிக்காலத்தை நீட்டிக்கும் மசோதாவை மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் தக்கல் செய்தார்.
நாட்டின் விசாரணை அமைப்பின் வேகத்தை விரைவுபடுத்தவும், பயங்கரவாதத்திற்கு துணையாக நிற்கும் கறுப்பு பணம், ஊழல் போன்ற குற்றங்களைத் தடுக்கவும் இந்த மசோதா தாக்கல் செய்யப்படுவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்த மசோதாவின்படி, சிபிஐ, அமலாக்கத்துறை ஆகிய அமைப்புகளின் இயக்குனர் பொறுப்பில் இருப்பவரின் பதவிக்காலம் இரண்டாண்டுகளில் இருந்து ஐந்து ஆண்டுகளாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
மசோதாவை அமைச்சர் தாக்கல் செய்தபோது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இருப்பினும் அமளிக்கு இடையே மசோதா வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது. கடந்த டிசம்பர் 3ஆம் தேதி இந்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.
சிபிஐ அமைப்பின் தற்போதைய இயக்குனராக சுபோத் குமார் ஜெய்ஸ்வாலும், அமலாக்கத்துறையின் இயக்குனராக சஞ்சய் குமார் மிஸ்ராவும் உள்ளனர்.
இதையும் படிங்க: லக்கிம்பூர் கேரி சம்பவம் திட்டமிட்டு நடத்தப்பட்டது - விசாரணை குழு அறிக்கை