டெல்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கில் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்த நிலையில், ராகுல் காந்தி இன்று (ஜூன் 13) டெல்லியில் உள்ள அமலாக்கத்துறையில் ஆஜரானார். முன்னதாக ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி இருவரும் டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்திற்கு சென்றனர்.
இந்த அலுவலகத்தில் ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட், சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகேல், ப. சிதம்பரம், சச்சின் பைலட் உள்ளிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர்களுடன் ராகுல் காந்தி ஆலோசனையில் ஈடுபட்ட பிறகு பிறகு அமலாக்கத்துறை அலுவலகம் சென்றார். அவரிடம் மூன்று மணி நேரமாக விசாரணை நடத்தப்பட்டது. இதையடுத்து விசாரணை முடிந்து புறப்பட்டார்.
![காங்கிரஸ் தொண்டர்கள் போராட்டம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/15546729_1093_15546729_1655106100896.png)
இதனிடையே அமலாக்கத்துறை அலுவலகம் முன்பு நூற்றுக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கலைத்து, பலரை கைது செய்துள்ளனர். இதேபோல நாடு முழுவதும் காங்கிரஸ் தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
யங் இந்தியன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, எம்.பி., ராகுல்காந்தி இருவரும் பங்குதாரர்களாக உள்ளதாகவும், முறைகேடு நடந்திருப்பதாகவும் பாஜக மூத்தத் தலைவர் சுப்பிரமணிய சுவாமி வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்து வரும் அமலாக்கத்துறை, ஜூன் 8ஆம் தேதி ஆஜராகுமாறு சோனியா காந்திக்கு சம்மன் அனுப்பியிருந்தது. ஆனால், சோனியாகாந்தி கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், விசாரணைக்கு ஆஜராவதிலிருந்து விலக்கு கோரியிருந்தார். இதனால் ஜூன் 23ஆம் தேதி ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது.
இதேபோல ராகுல்காந்திக்கு ஜூன் 8ஆம் தேதி ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது. அப்போது அவர் வெளிநாட்டிலிருப்பதாகக் கூறி விலக்கு கேட்டார். அந்த வகையில் ஜூன் 13ஆம் தேதி ஆஜராக அமலாக்கத்துறை அவகாசம் அளித்தது. அதன்படி, ராகுல்காந்தி ஆஜரானார்.
இதையும் படிங்க: உ.பி. வன்முறையில் ஈடுபட்டவர் வீட்டில் இரண்டு துப்பாக்கிகள் பறிமுதல்