கர்நாடக மாநிலம் மங்களூருவில் உள்ள மீன் கடை ஒன்றில், இறைச்சிக்காக வெட்டப்பட்ட மீனில் நெகிழிப்பை இருப்பதைக் கண்டு கடை உரிமையாளர் அதிர்ச்சி அடைந்துள்ளார். அந்த மீன் ரீஃப் குவாட் எனப்படும் முரு வகையைச் சேர்ந்தது. அதன் எடை சுமார் 10 கிலோ இருந்துள்ளது. இதனைக் கடை உரிமையாளர் படம்பிடித்து, சமூக வலைதளங்களில் வெளியிட்டதைத் தொடர்ந்து, இது பேசுபொருளாக மாறியுள்ளது.
இது குறித்து பேசிய மங்களூரு மீன்வளக் கல்லூரி தலைவர் ஏ. செந்தில்வேல், "நுண் அளவிலான நெகிழி சாப்பிட்ட மீன்களைப் பார்ப்பது அரிதாகிவிட்டது. ஆனால், ஒரு மீனுக்குள் முழு நீள நெகிழிப்பை இருப்பதைப் பார்க்கும்போது, நிச்சயம் ஆழ்கடலில்தான் அந்த மீன் பிடிக்கப்பட்டிருக்க வேண்டும்.
கடல் முழுவதும் நெகிழிகளால் நிறைந்துள்ளது. மீனவர்களின் வலையில் நிச்சயம் 40 விழுக்காடு நெகிழிதான் சிக்கியிருக்கக்கூடும்.
இந்த மாசு, நிச்சயம் கடலுக்கு அடியில் உள்ள உயிரினங்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும். இதனைத் தடுக்க மாவட்ட நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவோம். நெகிழியை மீன்கள் உட்கொள்வது நிச்சயம் ஆபத்தான விவகாரம்தான்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ட்ராபிக்கை ஸ்தம்பிக்க செய்த புலி... குட்டிகளுடன் கம்பீர வாக்!