லக்னோ (உத்தரப் பிரதேசம்): பாரா பகுதியில் நில அபகரிப்பாளர்கள் சிலர், நீதிபதியையும் அவரது மனைவியையும் துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதோடு உரிமம் உள்ள ரிவால்வர் துப்பாக்கி, ரைஃபில் துப்பாக்கி உள்பட தங்கங்களை கொள்ளையடித்துச் சென்றனர். இச்சம்பவம் நீதிபதியின் வீட்டின் அருகே சுற்றுச்சுவரை அடையாளம் தெரியாத சிலரால் இடிக்கப்பட்டுள்ளதைக் காண்பதற்காக தனது மனைவியுடன் அவர் சென்றபோது நிகழ்ந்துள்ளது.
மொராதாபாத் உயர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதியாக சோம்நாத் சிங் என்பவர் பணியாற்றி வருகிறார். பாரா பகுதியிலுள்ள தங்களுக்கு சொந்தமான இடத்தில் சுற்றுச்சுவர் கட்டும் பணி நடந்துவருகிறது. 10 மீட்டர் நீளத்திற்கு அவர்கள் கட்டிய சுற்றுச்சுவரை அவரது பக்கத்து வீட்டுக்காரர்களான அப்பாஸ், அலி முகமது, இர்ஃபான் மற்றும் அவரது மனைவி உள்ளிட்டோர் இடித்துள்ளனர்.
இதைக் கேள்விப்பட்டு அங்கு தன் மனைவியுடன் சென்ற நீதிபதியை, 25 பேர் கொண்ட கும்பல் ஆயுதங்களுடன் தாக்கியதோடு, துப்பாக்கியைக் காட்டி கொள்ளையில் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இதுகுறித்து நீதிபதி கூறுகையில், " இச்சம்பவம் கடந்த நவ.3 ஆம் தேதி நடந்ததாகவும், ஆனால் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது நவ.7 ஆம் தேதி தான் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்ததாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து ஏசிபி ககோரி அனித்ரா விக்ரம் சிங் கூறுகையில், "சிங்கின் வீட்டு மனையின் எல்லை சுவரை சிலர் இடித்ததாக எங்களுக்குத் தகவல் கிடைத்தது. சிங் தனது மனைவியுடன் கடந்த நவ.3 ஆம் தேதி அங்கு சென்றபோது, அவர்கள் தாக்கப்பட்டு செல்ஃபோன், தங்கச் செயின், உரிமம் உள்ள ரிவால்வர், மற்றும் துப்பாக்கி கொள்ளையடிக்கப்பட்டதாக தெரிகிறது.
இதில் அவர்களுக்கு சிறிய காயம் ஏற்பட்டது. பின்னர், அவர்கள் இருவரையும் மீட்ட உள்ளூர் மக்கள், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். இது குறித்து நீதிபதி, காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவரது புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான குற்றவாளியை கைது செய்ய தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது" என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: மனைவி குடும்பத்தை பழிவாங்க திட்டம்...கடத்தப்பட்டதாக நாடகம் ஆடியவர் கைது