டெல்லி: ஜி20 அமைப்பின் தலைமை பொறுப்பை 2022 டிசம்பர் 1ஆம் தேதி முதல் 2023 நவம்பர் 30ஆம் தேதி வரை இந்தியா ஏற்கவுள்ளது. இது 2023ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜி20 உச்சி மாநாட்டுடன் நிறைவடையும். உலக பொருளாதார நிர்வாகத்தில் முக்கிய பங்குவகிக்கும் சர்வதேச பொருளாதார ஒத்துழைப்புக்கான முக்கிய அமைப்பாக ஜி20 விளங்குகிறது. இந்த ஜி20 தலைமைப் பொறுப்பை ஏற்கும் நாட்டில், செயலகம் அமைப்பது அதற்கான ஏற்பாடுகளை அந்நாடு மேற்கொள்வது வழக்கமாகும். வெளியுறவு அமைச்சகம், நிதி அமைச்சகம் உள்ளிட்ட பொருத்தமான மற்ற அமைச்சகங்கள் மற்றும் அது சார்ந்த துறைகளிலிருந்து இதுகுறித்த நிபுணத்துவம் பெற்ற பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள் இந்தப் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.
2024 பிப்ரவரி வரை இந்தச் செயலகம் செயல்படும். பிரதமர் தலைமையிலான உயர்மட்ட குழு செயலக செயல்பாட்டுக்கு வழிகாட்டும். இந்த குழுவில் இடம்பெறும் நிதியமைச்சர், உள்துறை அமைச்சர், வெளியுறவு அமைச்சர், ஜி20 ஷெர்பா அமைப்பு (வர்த்தகம் மற்றும் தொழில், ஜவுளி, நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சர்) ஆகியோர் இந்தியாவின் ஜி20 தலைமைப் பொறுப்புக்கு ஒட்டுமொத்த வழிகாட்டுதலை வழங்குவார்கள்.
இந்தியாவின் ஜி20 தலைமைத்துவத்திற்கான இலச்சினை, கருப்பொருள், இணையதளத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று (நவம்பர் 8) வெளியிடுகிறார். இதுகுறித்து பிரதமர் அலுவலகம் தரப்பில், இந்தியா வரும் டிசம்பர் 1ஆம் தேதி முதல் ஜி20 தலைமைப் பொறுப்பை ஏற்கவுள்ளது. சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகளில் உலகளவில் பங்களிக்க ஜி20 தலைமைத்துவம் இந்தியாவிற்கு ஒரு தனித்துவமான வாய்ப்பை வழங்குகிறது. இந்த ஜி20 தலைமைக்கான இலச்சினை, கருப்பொருள், இணையதளம் ஆகியவை இந்தியாவின் செய்தி மற்றும் அதிக முன்னுரிமைகளை உலகளவில் பிரதிபலிக்கும்.
இதனை பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் வெளியிடுகிறார். ஜி20 என்பது உலக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 85%, உலகளாவிய வர்த்தகத்தில் 75% மற்றும் உலக மக்கள்தொகையில் மூன்றில் இரண்டு பங்கைக் கொண்ட சர்வதேச பொருளாதார ஒத்துழைப்புக்கான முதன்மை மன்றமாகும். ஜி20 தலைமையின் போது, நாடு முழுவதும் பல இடங்களில் 32 வெவ்வேறு துறைகளில் சுமார் 200 கூட்டங்களை இந்தியா நடத்தும். அடுத்தாண்டு நடைபெறவுள்ள ஜி20 உச்சி மாநாடு, இந்தியாவால் நடத்தப்படும் மிக உயரிய சர்வதேசக் கூட்டங்களில் ஒன்றாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நாட்டின் வளர்ச்சிக்கு அத்வானியின் பங்களிப்பு மகத்தானது - பிரதமர் மோடி