தாத்ரி: ஹரியானா மாநிலம் தாத்ரி அருகே உள்ள அடேலா கலன் கிராமத்தைச் சேர்ந்த 90 வயது முதியவர் கல்லுராம், பறவைகள் மற்றும் விலங்குகளின் தாகத்தைத் தீர்ப்பதற்காக, தனது வீட்டின் அருகே உள்ள மலையில் குளம் ஒன்றை வெட்டிப் பராமரித்து வருகிறார்.
கடந்த 2010ஆம் ஆண்டு, மலையின் நடுவே 50 மீட்டர் ஆழத்தில் குளம் வெட்டியுள்ளார். அந்த குளத்தில் தண்ணீரை சேமித்து, அதை பறவைகள் மற்றும் விலங்குகள் சிரமமின்றி குடிக்கவும் வழி செய்துள்ளார். இதில் தினந்தோறும் ஏராளமான பறவைகள் வந்து நீர் அருந்திச்செல்கின்றன.
இதுகுறித்து கல்லுராம் கூறுகையில், "என் இளம் வயதில் ஆடு, மாடு மேய்க்க மலைப்பகுதிகளுக்குச்செல்லும்போது, தண்ணீர் கிடைக்காமல் விலங்குகள் மற்றும் பறவைகள் உயிரிழப்பதைப் பார்த்திருக்கிறேன். அதனால், பறவைகள் மற்றும் விலங்குகளுக்காக குளம் ஒன்றை வெட்ட வேண்டும் என நினைத்தேன்.
அதன்படி, மலை மீது குளத்தை வெட்டினேன். சுத்தியல் மற்றும் உளியை வைத்தே இந்த குளத்தை வெட்டினேன். சுத்தியல், உளியை வைத்து நான் மலையை உடைக்க ஆரம்பித்தபோது, பார்ப்பவர்கள் எல்லாம் என்னை பைத்தியம் என்று கூறி சிரித்தார்கள். ஆனால், எனது மகனும் பேரனும் எனக்கு ஆதரவாக இருந்தார்கள். நான் குளத்தைக் கட்டி முடித்து, 50 ஆண்டுகளாகப் பராமரித்து வருகிறேன். இந்த குளத்தை அரசு பொறுப்பேற்று பராமரிக்க வேண்டும்" என்று கூறினார்.
இந்த குளத்தை ஆய்வு செய்த தாத்ரி மாவட்ட துணை ஆணையர் ஷியாம்லால் புனியா, எம்.பி தரம்பிர் சிங் ஆகியோர் கல்லுராமின் துணிச்சலைப் பாராட்டினர். இந்த இடம் விரைவில் சுற்றுலா தலமாக மேம்படுத்தப்படும் என எம்.பி., தரம்பீர் சிங் உறுதியளித்தார்.