ஆந்திரா: ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தில் தளவாய்ப்பள்ளியைச் சேர்ந்த புஷ்பம்மா(62) என்பவர், கடந்த டிசம்பர் 31ஆம் தேதி வீட்டில் தவறி விழுந்துவிட்டார். அதில் அவருக்கு காலில் அடிப்பட்டது. வலி தொடர்ந்து இருந்து வந்ததால், எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கலாம் என்று அச்சம் அடைந்த அவரது குடும்பத்தினர், கடந்த 4ஆம் தேதி புஷ்பம்மாவை சித்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் தொடையில் எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பதை உறுதி செய்தனர். மேலும் தொடையில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தனர். அதன்படி, மருத்துவப் பரிசோதனைகள் அனைத்தும் முடிவடைந்து, புஷ்பம்மாவை அறுவை சிகிச்சைக்கு அழைத்துச்சென்றனர்.
சிகிச்சையின்போது எதிர்பாராதவிதமாக புஷ்பம்மாவின் தொடையை மருத்துவர்கள் துண்டித்தனர். பிறகு யாருக்கும் தெரியக்கூடாது என்பதற்காக, தொடைப்பகுதியை சேர்த்து வைத்து தையல் போட்டுள்ளனர். பின்னர் பல்வேறு காரணங்களைக் கூறி, அறுவை சிகிச்சையினை பாதியில் நிறுத்தியுள்ளனர். வேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்லவும் அறிவுறுத்தியுள்ளனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர், இதுதொடர்பாக மருத்துவமனை கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தனர். சம்மந்தப்பட்ட மருத்துவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கண்காணிப்பாளர் உறுதி அளித்தார். இந்த சம்பவத்தில் புஷ்பம்மா நல்வாய்ப்பாக உயிர் பிழைத்துக் கொண்டார். அரசு மருத்துவர்கள் அலட்சியமாக நடந்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: Haryana gas Blast: கேஸ் சிலிண்டர் வெடித்த விபத்தில் 6 பேர் பலி!