நாஷிக்: மகாராஷ்டிரா மாநிலம் நாஷிக் அருகே, தேவ்கான் என்ற பகுதியில் உள்ள அரசுப்பெண்கள் ஆசிரமப்பள்ளியில் மரம் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது, தேவாரே என்ற ஆசிரியர், மாதவிடாய் ஏற்பட்டுள்ள மாணவிகள் மரம் நடக்கூடாது எனக்கூறியுள்ளார். இதைக் கேட்டு மாணவிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். தொடர்ந்து மாதவிடாய் ஏற்பட்டிருந்த ஒரு மாணவியை, நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதிக்கவில்லை எனத்தெரிகிறது.
இதுதொடர்பாக மாணவி கூறுகையில், "எனக்கு மாதவிடாய் காலம் என்பதால், என்னை மரம் நட அனுமதிக்கவில்லை. ஆசிரியர் கூறுவதை மீறி நான் நிகழ்ச்சியில் கலந்துகொண்டால், மதிப்பெண்களைக் குறைத்துவிடுவேன் என மிரட்டினார். ஆசிரமப்பள்ளியில் ஏராளமான பிரச்னைகள் உள்ளன" என்று தெரிவித்தார்.
நாட்டில் ஒருபுறம் தொழில்நுட்பமும், நாகரிகமும் வளர்ந்துகொண்டே போனாலும், கிராமப்புறங்களில் பல மூட நம்பிக்கைகள் இன்னும் இருந்து வருகின்றன. மாதவிடாய் குறித்து பள்ளிக்குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய ஆசிரியரே, போதிய விழிப்புணர்வு இல்லாமல், மாணவியிடம் இவ்வாறு நடந்துகொண்டது பல தரப்பினர் மத்தியில் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.