புவனேஸ்வர்: ஒடிஷா மாநில முன்னாள் முதலமைச்சர் கிரிதர் கமாங்(79) கடந்த 2015ஆம் ஆண்டு காங்கிரசிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தார். கோராபுட் தொகுதியிலிருந்து ஒன்பது முறை மக்களவைக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சுமார் ஏழு ஆண்டுகள் பாஜகவுடன் பயணித்த கிரிதர் கமாங், தற்போது பாஜகவிலிருந்து விலகியுள்ளார்.
நேற்று(ஜன.25) செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த கிரிதர் கமாங், தனது ராஜினாமா கடிதத்தை பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டாவுக்கு அனுப்பியுள்ளதாகத் தெரிவித்தார். பாஜகவில் பல அவமதிப்புகளைச் சந்திக்க நேர்ந்ததாகவும், அங்கீகாரம் கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை, அவமதிப்பைப் பொறுத்துக்கொள்ள முடியாது என்பதால் பாஜகவிலிருந்து விலகுவதாகவும் தெரிவித்தார்.
தனக்கு ஆதரவு அளித்த பிரதமர் மோடி மற்றும் அமித்ஷாவுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டார். பாஜகவிலிருந்த கடந்த சில ஆண்டுகளில் தன்னால் அரசியல் மற்றும் சமூக ரீதியாக மக்களுக்குச் சேவை செய்ய முடியவில்லை என்றும் தெரிவித்தார்.
அதேபோல் கிரிதர் கமாங்கின் மகன் சிஷிர் கமாங்கும் பாஜகவிலிருந்து விலகினார். இவர்கள் இருவரும் தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவின் பாரத ராஷ்டிர சமிதியின் சேர வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இருவரும் கேசிஆர் உடன் பல முறை ஆலோசனை நடத்தியதாகக் கூறப்படுகிறது. இது குறித்து செய்தியாளர்கள் சிஷிர் கமாங்கிடம் கேட்டபோது, விரைவில் தகவல் தெரிவிக்கப்படும் என்று கூறினார்.
இதையும் படிங்க: பிபிசி சர்ச்சை ஆவணப்படம் ஒளிபரப்பு - எஸ்.எப்.ஐ மாணவர்கள் கைது.. போராட்டம்..