ஷேக்புரா: பிகார் மாநிலம் ஷேக்புரா அருகே உள்ள மசோதா கிராமத்தில் வசித்து வந்த உமேஷ் சவுத்ரி என்பவருக்கும், அவரது மனைவிக்கும் நேற்று(ஜூலை 22) தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, உமேஷ் சவுத்ரி தனது மனைவியை கடுமையாக அடித்துள்ளார். இதனால், அச்சமடைந்த அவரது மனைவி, மூன்று வயது மகளை வீட்டிலேயே விட்டுவிட்டு, வெளியேறிவிட்டார்.
மனைவி வீட்டை விட்டு சென்றதால் ஆத்திரமடைந்த உமேஷ், விளையாடிக் கொண்டிருந்த மூன்று வயது மகளை அடித்துக் கொலை செய்துள்ளார். பிறகு உமேஷ் தலைமறைவாகியுள்ளார். குழந்தையை கொலை செய்தது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், இன்று காலை கிராமத்தில் உள்ள மரத்தில் உமேஷ் தூக்கிட்ட நிலையில் சடலமாக தொங்கினார். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். உமேஷ் நேற்று இரவு மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.