பிஜ்னோர்: உத்தரப்பிரதேச மாநிலம், பிஜ்னோர் நகரில் வசிக்கும் 14 வயது சிறுமிக்கு அடிக்கடி வயிற்று வலி மற்றும் வாந்தி ஏற்பட்டு வந்தது. இதனால் சிறுமி சரிவர சாப்பிடாமல் இருந்துள்ளார். இதனால், அவரது பெற்றோர் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
அங்கு சிறுமிக்கு சிடி ஸ்கேன் செய்யப்பட்டுள்ளது. ஸ்கேன் ரிப்போர்ட்டை பார்த்த மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். காரணம் சிறுமியின் வயிற்றில், கட்டி போல உருண்டை வடிவத்தில் தலைமுடி சேர்ந்திருந்தது. இதையடுத்து உடனடியாக சிறுமிக்கு அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் முடிவு செய்தனர். பின்னர் சுமார் இரண்டு மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து சிறுமியின் வயிற்றில் இருந்து சுமார் இரண்டரை கிலோ முடியை அகற்றினர். சிறுமிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சிறுமிக்கு 'ட்ரைக்கோட்டிலோமேனியா' எனப்படும் தலைமுடியை உண்ணும் பழக்கம் இருந்ததாகவும், அது சிறுமியின் பெற்றோருக்குத் தெரியாமல் இருந்ததால் இந்த அளவுக்கு வயிற்றில் முடி சேர்ந்ததாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். தலைமுடி செரிமானம் ஆகாததால் வயிற்றின் ஒரு பகுதியில் சேர்ந்து பந்து போன்ற வடிவத்தை அடைந்ததாகவும் தெரிவித்தனர். தற்போது சிறுமியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், சரியான நேரத்தில் அறுவை சிகிச்சை செய்யாமல் இருந்திருந்தால், சிறுமியின் குடல் கிழிந்திருக்கக் கூடும் என்றும் மருத்துவர்கள் குறிப்பிட்டனர்.
ட்ரைக்கோட்டிலோமேனியா என்பது ஒரு வகை நோய். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களது தலைமுடி, புருவங்களில் உள்ள முடி உள்ளிட்டவற்றை பிடுங்கி சாப்பிடும் விநோதப் பழக்கம் கொண்டிருப்பார்கள். மன அழுத்தம், ஓசிடி போன்ற பாதிப்புகள் உள்ளவர்கள் இது போல தங்களது தலைமுடியை உண்ணும் பழக்கம் கொண்டிருக்கிறார்கள். இந்த முடி சாப்பிடும் பழக்கம் பல ஆண்டுகள் கூட நீடிக்கலாம் என்று கூறப்படுகிறது.
இதையும் படிங்க: அரியவகை நோய்களை குணப்படுத்தும் மருந்துகளுக்கு இறக்குமதி வரி விலக்கு!