உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவ் பகுதியில் சிறுமியை பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கிய வழக்கில் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பாஜக சட்டமன்ற உறுப்பினர் குல்தீப் சிங் செங்கார் குற்றவாளி என டெல்லி நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பை வழங்கியுள்ளது.
2017ஆம் ஆண்டு உன்னாவ் பகுதியைச் சேர்ந்த சிறுமி, பாரதிய ஜனதா கட்சியிலிருந்து நீக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் குல்தீப் சிங் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகப் புகாரளித்தார். முதலில் இவரின் குற்றச்சாட்டை ஏற்பதில் தாமதம் காட்டிய காவல்துறை, பல்வேறு அழுத்தங்களுக்குப்பின் வழக்குப்பதிவு செய்தது. பின்னர் வழக்கு விசாரணையின்போது டெல்லி சென்ற இளம்பெண்ணின் காரை லாரி மோதி உயிருக்கு ஆபத்தான நிலைக்குச் சென்றார்.
இச்சம்பவம் கொலை முயற்சி என குற்றச்சாட்டு எழவே, உச்ச நீதிமன்றம் தலையிட்டு பெண்ணுக்கு உரிய பாதுகாப்பும் சிகிச்சையும் வழங்க உத்தரவிட்டது. இந்நிலையில், வழக்கை விசாரித்த டெல்லி நீதிமன்ற நீதிபதி தர்மேஷ் சர்மா, குல்தீப் சிங் குற்றவாளி என இன்று தீர்ப்பளித்தார். தண்டனைக்கான வாதங்கள் டிசம்பர் 18ஆம் தேதி நடைபெறும் எனத் தெரிவித்தார். இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மற்றொரு நபரான சஷி சிங் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: நிர்பயா தினம்: தொடரும் பாலியல் கொடுமைகளுக்கு தீர்வு எப்போது?