தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தை அடுத்த பேகம்பேட்டில் புனித ஃபிரான்சிஸ் மகளிர் கல்லூரி செயல்பட்டுவருகிறது. கல்லூரி நிர்வாகம் பல்வேறு விஷயங்களில் பல அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து மாணவிகளுக்கு கட்டுப்பாடு விதித்து வருகிறது. நேரம் தவறாமை, ஒழுக்கம் உள்ளிட்ட வரிசையில் தற்போது மாணவிகளின் உடை விவகாரத்தில் ஒரு அதிரடி உத்தரவை பிறப்பித்து கல்லூரி நிர்வாகம் மாணவிகளின் கோபத்திற்கு ஆளாகியுள்ளது.
சமீபத்தில், மாணவிகள் கல்லூரிக்கு வரும்போது முட்டிக்கு கீழ் குர்தாவை அணிய வேண்டும் என்ற கட்டுப்பாட்டை கல்லூரி நிர்வாகம் விதித்திருக்கிறது. கல்லூரி நிர்வாகம் தங்கள் மீது அடக்குமுறையை கட்டவிழ்த்து விடுவதாகக் கூறி மாணவிகள் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் போராட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர்.
அந்த வகையில், இன்று நடைபெற்ற கல்லூரி முற்றுகைப் போராட்டத்தில் நூற்றுக்கணக்கான மாணவிகள் வகுப்பை புறக்கணித்து கல்லூரி நிர்வாகத்திற்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர். உடனடியாக ஆடைக்கட்டுப்பாடுக்கு விதிக்கப்பட்டுள்ள உத்தரவை திரும்பப்பெற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர். இதுகுறித்து பேசிய மாணவிகள், தாங்கள் கலாசார சீரழிவை ஏற்படுத்தும் வகையில் உடை அணியவில்லை, அதே போல் ஆபாசமாகவும் உடை அணிய மாட்டோம் என்றும் தெரிவித்துள்ளனர்.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வழக்கம்போல உடையணிந்து வந்த சில மாணவிகளை வகுப்புகளுக்குள் அனுமதிக்கவில்லை என்றும் திருப்பி வீட்டிற்கு அனுப்பப்பட்டதாகவும் மாணவிகள் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்.