சமூக ஆர்வலரும், வழக்கறிஞருமான பிரசாந்த் பூஷன், ஊரடங்கையொட்டி டிடி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட ராமாயணத்தை விமர்சித்து மார்ச் 28ஆம் தேதியன்று ட்விட்டரில் கருத்து ஒன்றை பகிர்ந்தார்.
அந்தப் பதிவில், “கட்டாய ஊரடங்கு உத்தரவினால் கோடிக்கணக்கான மக்கள் பட்டினி கிடந்து, நூற்றுக்கணக்கான மைல்கள் நடந்து செல்லும்போது, எங்கள் இதயமற்ற அமைச்சர்கள் ராமாயணம் மற்றும் மகாபாரதத்தைத் தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டாடிக்கொண்டிருக்கின்றனர்” என்று குறிப்பிட்டிருந்தார்.
இதனையடுத்து, ராணுவத்திலிருந்து ஓய்வுபெற்ற ராஜ்கோட்டைச் சேர்ந்த ஜெய்தேவ் பாய் ஜோஷி பிரசாந்த் பூஷன் மீது வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில், ராமாயணம் மற்றும் மகாபாரதத்தை பிரசாந்த் பூஷன் இழிவுபடுத்தியதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் அசோக் பூஷண், சஞ்சீவ் கண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வில் காணொளி மூலமாக இன்று விசாரிக்கப்பட்டது. அப்போது குஜராத் காவல் துறைக்கு நோட்டீஸ் அனுப்பியதுடன், பூஷனின் மனுவை இரண்டு வாரங்களுக்குப் பிறகு விசாரிக்குமாறு பட்டியலிட்டது.
இதில், பூஷனுக்காக ஆஜரான மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் டேவ், பூஷனுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யவும், அவருக்கு எதிராக இடைக்கால பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் கோரியிருந்தார். இதனையடுத்து இந்த மனுவை விசாரணைக்காக நீதிபதிகள் எடுத்துள்ளனர்.
இதையும் படிங்க...தொழிலாளர்களைப் பாதுகாக்கும் நோக்கில் நடவடிக்கை - மாயாவதி