புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டம் தொடங்கவுள்ள நிலையில் புதுச்சேரி முழுவதும் பாதுகாப்பு பணிக்கு 1,500 காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். பல்வேறு இடங்களில் சுற்றுலாப் பயணிகள் தங்களது வாகனங்களை நிறுத்துவதற்கு ஏதுவாக பார்க்கிங் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் புத்தாண்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தெரிந்து கொள்ள முதலமைச்சர் நாராயணசாமி காவல்துறை உயரதிகாரிகள் கூட்டத்தை இன்று கூட்டினார். புதுச்சேரி சட்டப்பேரவை கமிட்டி அறையில் நடந்த இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அருண், காவல்துறை இயக்குநர் பாலாஜி ஸ்ரீவத்ஸவா, உள்ளாட்சித் துறை அலுவலர்கள், ஆணையர்கள், மாநகர முதுநிலை காவல் கண்காணிப்பாளர் ராகுல் அல்வால், காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்திற்கு பின்னான செய்தியாளர் சந்திப்பில் பேசிய நாராயணசாமி, புத்தாண்டை முன்னிட்டு புதுச்சேரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு எவ்வித இடையூரும் தரக்கூடாதென்று காவல்துறையிடம் தான் தெளிவுபட கூறியுள்ளதாகவும் சுற்றுலாத்துறை மூலம் புதுச்சேரி சின்ன வீராம்பட்டினம் கடற்கரை, புதுச்சேரி கடற்கரை படகு குழாம் உள்ளிட்ட பகுதிகளுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
புத்தாண்டை முன்னிட்டு புதுச்சேரியில் 50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை சுற்றுலாப் பயணிகள் வருவதற்கு வாய்ப்புள்ளதால், குடிநீர் வசதி, நடமாடும் கழிவறை வசதிகள் செய்யப்பட்டுள்ளன எனத் தெரிவித்த அவர், துறைமுகப் பகுதியில் நடைபெறவிருந்த புதுவருட நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன என்றும், புதுச்சேரியில் உள்ள தங்கும் விடுதிகளில் நடைபெறும் புத்தாண்டு நிகழ்ச்சிகளுக்கான வரிகளை குறைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.
புதுச்சேயில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் குறித்த கேள்விக்கு, புதுச்சேரி சின்ன ஊர் இதில் தாங்கள் என்ன செய்ய முடியும் என்று பதிலளித்தார்.
இதையும் படிங்க : கேட் கீப்பரை தாக்கிய போதை இளைஞர்கள்