புதுச்சேரி: ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு இடையூறாகவும், மக்கள் நலத்திட்டங்களைச் செயல்படுத்தத் தடையாகவும் தொடர்ந்து செயல்பட்டு வரும் துணை நிலை ஆளுநர் கிரண்பேடியை திரும்பப்பெற வலியுறுத்தி மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் விதமாகக் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக்கட்சிகள் கடந்த இரண்டு மாதங்களாக பல்வேறு கட்ட அறப்போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.
தொடர்ந்து உண்ணாவிரதம், முழு அடைப்பு போராட்டம் என கிரண்பேடிக்கு எதிராக பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபடப்போவதாகக் காங்கிரஸ் கட்சி அறிவித்தது. அதன்படி புதுச்சேரி அண்ணாசிலை முன்பு காங்கிரஸ், அதன் கூட்டணிக் கட்சிகளான திமுக, இடதுசாரிகள், விடுதலை சிறுத்தைகள், மதிமுக உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியினர், மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஏ.வி.சுப்ரமணியன், முதலமைச்சர் நாராயணசாமி, நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியலிங்கம், அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், தொண்டர்கள் மகளிர் காங்கிரஸ் உள்பட அனைவரும் உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாலை வரை நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை முதலமைச்சர் நாராயணசாமி பழச்சாறு வழங்கி முடித்து வைத்தார்.