புதுச்சேரி முதலமைச்சரின் மக்களவை செயலாளர் லட்சுமி நாராயணன் எம்.எல்.ஏ. சட்டப்பேரவையில் இன்று (ஜூலை 3) செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் பேசுகையில், "புதுச்சேரி ராஜ்பவன் தொகுதிக்குட்பட்ட சின்னையாபுரம், ராஜகோபால் கிராமம் ஆகிய பகுதியில் வசிக்கும் சுமார் 220 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் அங்குள்ள வீடுகளுக்கு பட்டா வழங்கக் கோரி அரசுக்கு கோரிக்கை வைத்தனர். ஆனால், பொதுமக்கள் கோரிக்கையை ஏற்க முடியாது, சட்டத்தில் அதற்கு வழியில்லை, இடத்தின் உரிமையாளரை அணுகி ஈன கிரயம் பெற்றுக்கொள்ளுங்கள் என்று அரசு கூறிவிட்டது.
பின்னர் சின்னையாபுரம் பகுதி மக்கள் வசிக்கும் நிலத்தின் உரிமையாளரிடம் ஒரு சதுர அடிக்கு 275 ரூபாய் கொடுத்து கிரயம் செய்ய புதுச்சேரி பதிவுத் துறைக்கு சென்றபோது, அலுவலர்கள் மறுப்பு தெரிவித்து இன்றைய தேதியில் அதிக அளவில் உள்ள அரசு நிர்ணயித்த முத்திரைத்தாள் தொகையை கொடுத்தால் தான் பதிவு செய்ய முடியும் என்று கூறினர். இதனால் பத்திரப் பதிவு செய்யாமல் அங்கிருந்து பொதுமக்கள் கிளம்பிவிட்டனர்.
இது குறித்து அங்கு வசிக்கும் மக்கள் சார்பில் ஆளும் அரசுக்கு தெரியப்படுத்த எனது தலைமையில் புதுச்சேரி முதலமைச்சரிடம் மனு அளிக்கப்பட்டது. இது தொடர்பாக புதுச்சேரி அமைச்சரவை கூட்டத்தை கூட்டி ஆலோசனை செய்தும் உறுதியளித்தும் இதற்கு தலைமைச் செயலரிடம் இருந்து எந்த தீர்வும் கிடைக்கவில்லை.
இது சம்பந்தமாக தலைமைச் செயலர் நல்ல முடிவு எடுக்க வேண்டும் என்று கடிதம் கொடுக்கப்பட்டது. ஆனால் இதுநாள் வரை தலைமைச் செயலர் எந்த முடிவும் தெரிவிக்காமல் உள்ளார். இதனால் வரும் 9ஆம் தேதி தலைமைச் செயலக அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தப்படும்" என்று எச்சரிக்கை விடுத்தார்.
இதையும் படிங்க: திருவாரூர் மாவட்டத்தில் கரோனாவால் உயிரிழந்த முதியவர்!