சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அனைத்து வயதுடைய பெண்களும் செல்லலாம் என்ற வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை உச்ச நீதிமன்றம் சமீபத்தில் அளித்தது. இந்த தீர்ப்பை செயல்படுத்தியே தீர வேண்டும் என்பதில் கேரள அரசு உறுதியாக இருக்கிறது. ஆனால் கோயிலுக்குள் பெண்கள் நுழைய எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர், இந்து அமைப்பினர் உள்ளிட்டோர் கேரளாவில் கடுமையான போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இருப்பினும் கனகதுர்கா, பிந்து என்ற இரண்டு பெண்கள் ஐயப்பன் சன்னிதானம் வரை சென்று சுவாமி தரிசனம் செய்து வரலாற்றில் இடம்பிடித்தனர்.
இதனையடுத்து சபரிமலை சென்ற கனகதுர்காவை அவரது மாமியார் கடுமையாக தாக்கினார் என்றும் கூறப்பட்டது. இதனால் தங்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என இரண்டு பெண்களும் உச்ச நீதிமன்றத்த்ல் மனுத்தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த நீதிமன்றம், அவர்களுக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும் என உத்தரவிட்டது.


இந்நிலையில், மாசி மாத பூஜைக்காக சபரிமலையில் இன்று மாலை மீண்டும் நடை திறக்கப்படுகிறது. 5 நாட்கள் நடை திறக்கப்பட்டு இருக்கும். ஐயப்பனை தரிசிக்க பெண்கள் வரக்கூடும் என்பதால் பாதுகாப்புக்காக 3,000 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், கனகதுர்கா, பிந்து ஆகிய இரண்டு பெண்கள் மீண்டும் ஐயப்பனை தரிசிக்க வருவார்கள் எனவும் மீண்டும் பாஜக, இந்து அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.