கொச்சி - மங்களூரு இடையே குழாய் மூலம் எரிவாயு எடுத்துச் செல்லும் திட்டத்தை பிரதமர் மோடி காணொலி வாயிலாக நாளை காலை 11 மணிக்குத் தொடங்கிவைக்கிறார். 'ஒரு நாடு ஒரு எரிவாயுத் திட்டம்' என்ற நோக்கத்தை அடைவதில் கொச்சி - மங்களூரு இடையிலான குழாய் மூலம் எரிவாயு எடுத்துச் செல்லும் திட்டம் மிகப் பெரிய மைல்கல்லாகும்.
இந்நிகழ்ச்சியில், கர்நாடக ஆளுநர் வஜுபாய் வாலா, அம்மாநில முதலமைச்சர் எடியூரப்பா, கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கான், அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.
உள்ளூர் குழாய்களின் மூலம் வணிகப் பயன்பாட்டிற்காக எரிவாயு விநியோகிக்கப்படவுள்ளது. 450 கிமீ தொலைவிலான இந்தக் குழாயை கெயில் நிறுவனம் அமைத்துள்ளது. கொச்சியில் அமைந்துள்ள இயற்கை எரிவாயு (எல்.என்.ஜி.) மறுசீரமைப்பு முனையத்திலிருந்து எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, கண்ணூர், கசராகாட் வழியே மங்களூருவுக்கு ஒரு நாளைக்கு 12 மில்லியன் மெட்ரிக் கன மீட்டர் அளவில் எரிவாயு எடுத்துச் செல்லப்படவுள்ளது. கிட்டத்தட்ட 3,000 கோடி ரூபாய் மதிப்பிலான இத்திட்டத்தை நரந்திர மோடி நாளை நாட்டுக்கு அர்ப்பணிக்க உள்ளார்.