உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் தொற்று, தெலங்கானா மாநிலத்தில் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில், இவற்றை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்காமல் தலைமைச் செயலகத்தை இடித்துவிட்டு, புதிதாக தலைமைச் செயலகம் கட்டுவதில் முதலமைச்சர் கே. சந்திரசேகர் ராவ் ஆர்வம் காட்டுவதாக, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன.
இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தெலங்கானா பாஜக தலைவர் கே. லக்ஷ்மன் கூறும்போது, "கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்காமல், புதிய தலைமைச் செயலகம் கட்டுவதில் முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் மும்முரமாக உள்ளார். இதை நாங்கள் கடுமையாக கண்டிக்கிறோம். இந்த அரசாங்கத்தின் ஒருதலைப்பட்ச, ஜனநாயக விரோத முடிவு தெலங்கானா மக்களுக்கு ஒரு பாடம்.
தலைமைச் செயலக கட்டடங்களை இடிப்பது திங்கள்கிழமை வரை நிறுத்தப்பட வேண்டும் என்ற தெலங்கானா உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை பாஜக வரவேற்கிறது. கோவிட் -19 சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைகள் கட்டுவதற்கு பதிலாக, தலைமைச் செயலகம் கட்டுவதற்கு ரூ. 500 கோடி மதிப்புள்ள கட்டுமானத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளார்" என்றார்.
இது தொடர்பாக பேசிய காங்கிரஸ் செயல் தலைவர் பொன்னம் பிரபாகர், தெலங்கானாவில் கரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து ஆபத்தான நிலையில் உள்ளது. இதை கண்டுகொள்ளாமல் செயலக கட்டடங்கள் இடிக்கப்படுவது தொடர்பாக முதலமைச்சர் ஆர்வம் காட்டி வருகிறார். இது மிகவும் ஆபத்தானது, கோவிட் - 19 காரணமாக மக்கள் கவலைப்படுவதால் புதிய தலைமைச் செயலகம் உருவாக்க இது சரியான நேரம் அல்ல" என்றார்.