புதுச்சேரி தேங்காய்திட்டு பகுதியைச் சேர்ந்தவர் இளந்திரையன். இவர் அதே பகுதியில் புதிதாக வீடு கட்டிவருகிறார். கட்டுமான பணிக்கான செங்கல், மணல் உள்ளிட்டவை சாலையில் கொட்டிவைத்திருந்தார்.
இதனை ஆய்வுசெய்த புதுச்சேரி நகராட்சி இளநிலைப் பொறியாளர் கிருஷ்ணமூர்த்தி நகராட்சியின் அனுமதி இன்றி சாலையில் கட்டுமான பொருள்கள் வைத்திருப்பதாகக் கூறி நகராட்சிக்கு அபராதம் செலுத்த வேண்டும், அபராதம்ம் செலுத்தாமல் இருக்க பத்தாயிரம் ரூபாய் லஞ்சமாகக் கேட்டுள்ளார். அதன்பேரில் இளந்திரையன் பணம் கொடுத்துள்ளார். நேற்று மாலை மீண்டும் அந்த அலுவலர் ரூபாய் 5 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார்.
இதனையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக இளந்திரையன் சென்னை சிபிஐ அலுவலகத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் புதுச்சேரிக்கு வந்த சிபிஐ அலுவலர்கள், கொடுத்த ஆலோசனைபடி இளநிலை பொறியாளர் கிருஷ்ணமூர்த்தியிடம் ஐந்தாயிரம் ரூபாயை இளந்திரையன் வழங்கினார் .
அப்போது அங்கு கண்காணிப்பில் இருந்த சிபிஐ அலுவலர்கள் கிருஷ்ணமூர்த்தியை கையும் களவுமாக பிடித்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.